இந்தியா

நிதி ஆயோக் துணை தலைவராக பொருளாதார நிபுணர் அசோக் லஹிரி நியமனம் | NITI Aayog

நிதி ஆயோக் தலைவராக பிரதமர் தொடர்ந்து செயல்படுவார்.

மத்திய கொள்கை வகுப்பு குழுவான நிதி ஆயோக்கின் புதிய துணை தலைவராக அசோக் குமார் லஹிரி நியமிக்கப்பட்டுள்ளார்.

மேலும் கே. வி. ராஜு, எம். ஸ்ரீனிவாஸ், அபய் கரந்திகர், கோபர்தன் தாஸ், ராஜீவ் கௌபா ஆகியோர் புதிய முழுநேர உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். நிதி ஆயோக் தலைவராக பிரதமர் தொடர்ந்து செயல்படுவார்.

பிரதமர் மோடி எக்ஸ் தள பதிவில் , புதிய குழுவிற்குத் தனது வாழ்த்துகளைத் தெரிவித்ததுடன், கொள்கை கண்டுபிடிப்புகள் மற்றும் தேசிய வளர்ச்சிக்காக இந்த அணி சிறப்பாகப் பங்களிக்கும் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

புதிய துணைத் தலைவராக நியமிக்கப்பட்டுள்ள அசோக் குமார் லஹிரி, பொருளாதார நிபுணர் ஆவார்.

இவர் இந்திய அரசின் முன்னாள் தலைமைப் பொருளாதார ஆலோசகராகவும், 15-வது நிதி ஆணையத்தின் உறுப்பினராகவும் பணியாற்றியுள்ளார்.

தற்போது மேற்கு வங்கத்தின் பாஜக சட்டமன்ற உறுப்பினராக இருக்கும் இவர், அம்மாநிலத்தில் இப்போது நடைபெற்று வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.