புது டெல்லி:
இந்தியாவில் ஒமைக்ரான் தொற்று அதிவேகமாக பரவி வருகிறது. 17 மாநிலங்களில் 422 பேர் ஒமைக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்கு மாநிலங்கள் இரவு ஊரடங்கை அமல்படுத்த வேண்டும் என மத்திய அரசு மாநிலங்களுக்கு கடிதம் எழுதியது. இதையடுத்து உத்தரப்பிரதேசம், குஜராத், மத்தியப்பிரதேசம், கர்நாடகா ஆகிய மாநிலங்கள் இரவு ஊரடங்கை அமல்படுத்தியுள்ளன.
இந்நிலையில் டெல்லியிலும் நாளை முதல் இரவு 10 மணி முதல் காலை 5 மணி வரை இரவு ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்படும் என்று அம்மாநில அரசு அறிவித்துள்ளது.
டெல்லியில் புதிதாக 290 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. பரவல் எண்ணிக்கை நேற்றிலிருந்து 16 சதவீதம் அதிகரித்துள்ளதாகவும், வெள்ளிக்கிழமையுடன் ஒப்பிடும்போது 38 சதவீதம் அதிகரித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கேஸ் பாசிட்டிவிட்டி விகிதம் 0.5 சதவீதமாக உயர்ந்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.