புதுடெல்லி:
பெங்களூரு ஓட்டலில் நடந்த குண்டுவெடிப்பை தொடர்ந்து மாநிலம் முழுவதும் பஸ், ரெயில் நிலையங்கள், மக்கள் கூடும் பகுதிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. இந்த குண்டுவெடிப்புக்கு எந்த ஒரு பயங்கரவாத அமைப்பும் பொறுப்பு ஏற்கவில்லை.
இதற்கிடையே, பெங்களூரு குண்டு வெடிப்பு வழக்கு தொடர்பாக துப்பு கொடுப்பவர்களுக்கு 10 லட்சம் ரூபாய் பரிசுத்தொகை அளிக்கப்படும். தகவல் கொடுப்பவர்களின் விவரங்கள் பாதுகாப்பாக இருக்கும் என என்.ஐ.ஏ. தெரிவித்தது.
இந்நிலையில், பெங்களூர் ஓட்டல் குண்டுவெடிப்பு வழக்கை விசாரித்து வரும் என்ஐஏ மேலும் இரு வீடியோக்களை வெளியிட்டுள்ளது. அந்த வீடியோ ஒன்றில், இளைஞர் ஒருவர் நடந்து செல்வது போலவும், மற்றொரு வீடியோவில் பேருந்தில் பயணம் செய்வது போலவும் காட்சிகள் பதிவாகியுள்ளது.
இந்தக் காட்சிகளை பதிவிட்டு, பெங்களூரு ராமேஸ்வரம் கபே ஓட்டல் குண்டுவெடிப்பு வழக்கில் தொடர்புடைய நபர் என சந்தேகிக்கப்படும் இவரது அடையாளத்தை உறுதிப்படுத்த பொதுமக்களின் உதவியை நாடுவதாக என்.ஐ.ஏ. தெரிவித்துள்ளது.
மேலும், இந்த நபர் தொடர்பான தகவல்களை பொதுமக்கள் 08029510900, 8904241100 என்ற தொலைபேசி எண்ணுக்கோ அல்லது info.blr.nia@gov.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கே அனுப்பலாம் எனவும் கூறியுள்ளது.