இந்தியா முழுவதும் கடந்த மே.3ம் தேதி நடைபெற்ற நீட்-யுஜி தேர்வு வினாத்தாள் கசிவு உள்ளிட்ட காரணங்களால் ரத்து செய்யப்பட்டது. அதனைத்தொடர்ந்து அறிவிக்கப்பட்டவாறு மறுதேர்வு இன்று சுமூகமாக நடைபெற்று முடிந்தது.
அதன்படி இந்தியா, வெளிநாடு என மொத்தம் 5451 தேர்வு மையங்களில் 22 லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் தேர்வெழுதினர். தொழில்நுட்ப மோசடிகளைத் தடுப்பதற்காக 51,311 ஜாமர்கள், தேர்வு அறைகளில் 1,38,560 சிசிடிவி கேமராக்கள் என பலத்த பாதுகாப்புகளுடன் தேர்வு நடத்தி முடிக்கப்பட்டுள்ளது.
கடந்த முறையைவிட இந்தமுறை வினாத்தாள் வழங்கல் உள்ளிட்ட செயல்முறைகளை கணக்கில்கொண்டு கூடுதலாக வழங்கப்பட்ட 15 நிமிடங்கள் உட்பட மொத்தம் 3.15 மணிநேரம் தேர்வு நடைபெற்றது. அதன்படி பிற்பகல் 2 மணிக்கு தொடங்கி மாலை 5.15 மணிக்கு தேர்வு முடிவடைந்தது.
தேர்வுக்கு பின்னர் மாணவர்கள் பலரும் இயற்பியல் பகுதி கடினமாக இருந்ததாக தெரிவித்துள்ளனர். மேலும் இத்தேர்வை விட, கடந்த தேர்விற்கான வினாத்தாள் எளிதாக இருந்ததாகவும் தெரிவித்துள்ளனர்.