இந்தியா

2025-இல் ஒரே குடும்பத்தில் 5 பேர் தேர்ச்சி.. 2026 நீட் வினாத்தாள் கசிவு வழக்கில் அதே குடும்பத்தினர் கைது - பகீர் பின்னணி

அசல் வினாக்கள் அடங்கிய மாதிரி வினாத்தாளை ராஜஸ்தான் பயிற்சி மையங்களுக்கு விற்றவர்கள்.

2025ஆம் ஆண்டு ராஜஸ்தானில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் நீட் தேர்வில் வெற்றி பெற்று அரசு மருத்துவக் கல்லூரிகளில் சேர்ந்தனர். இது அப்போது மிகப்பெரிய செய்தியாகப் பேசப்பட்டது.

2026 நீட் தேர்வின் அசல் வினாக்கள் அடங்கிய மாதிரி வினாத்தாள் கசிந்ததை தொடர்ந்து தேர்வு ரத்து செய்யப்பட்ட நிலையில் இந்த குடும்பத்தின் மோசடி அம்பலமாகி உள்ளது.

2026, மே 3 தேர்வு நடைபெற்ற நிலையில் அதற்கு சில தினங்கள் முன் வினாத்தாள் கசிந்துள்ளது. அந்த மாதிரி தாளில் அசல் தேர்வில் வேதியியலில் கேட்கப்பட்ட 45 கேள்விகளும், உயிரியலில் கேட்கப்பட்ட 90 கேள்விகளும் அப்படியே பொருந்தி இருந்தது.

நீட் வினாத்தாள் கசிவு வழக்கில் ராஜஸ்தானை சேர்ந்த தினேஷ் பிவால், அவரது சகோதரர் மாங்கி லால் மற்றும் மருமகன் விகாஸ் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவர்களே அசல் வினாக்கள் அடங்கிய மாதிரி வினாத்தாளை ராஜஸ்தான் பயிற்சி மையங்களுக்கு விற்றவர்கள் என கண்டறியப்பட்டுள்ளது.

மாங்கிலாலின் மகன் சவாய், மகள் பிரகதி, தினேஷின் மகள் குஞ்சன், மங்கிலாலின் மூத்த சகோதரரின் மகள்களான கன்ஷியாம் பாலக் மற்றும் சோனியா ஆகிய ஐவரும் கடந்த ஆண்டு நீட் தேர்வில் தேர்ச்சி பெற்று அரசுக் கல்லூரிகளில் சேர்ந்துள்ளனர்.

இவர்களின் முந்தைய தேர்வு மதிப்பெண்கள் குறைவு என்றபோதும் 2025 இல் அதிக மதிப்பெண்களின் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதன் மூலம் 2025 நீட் தேர்விலும் குற்றம்சாட்டப்பட்டவர்கள் முறைகேடு செய்திருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.