இந்தியா

நீட் மறுதேர்வு வினாத்தாள்களை கொண்டு செல்ல எம்ஐ 17 ஹெலிகாப்டர்கள் பயன்படுத்தப்படும்

நீட் யுஜி மறுதேர்வு வரையில், வினாத்தாள் தயாரிப்பாளர்கள், மதிப்பீட்டாளர்கள் மற்றும் மொழிபெயர்ப்பாளர்கள், பாதுகாப்பான ஓர் இடத்திற்கு மாற்றப்பட்டுள்ளனர்.

நாடு முழுவதும் மே 3 அன்று நடைபெற்ற இளநிலை மருத்துவ படிப்புகளுக்குக்கான நீட் தேர்வு, வினாத்தாள் கசிவு கண்டறியப்பட்டதை அடுத்து ரத்து செய்யப்பட்டது.

இதையடுத்து நீட்-யுஜி 2026 மறுதேர்வு ஜூன் 21, பிற்பகல் 2:00 மணி முதல் 5:15 மணி வரை நடைபெறும் என தேசிய தேர்வு முகமை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

வினாத்தாள் கசிவு குற்றச்சாட்டுகளுக்கு மத்தியில், முதலில் நடத்தப்பட்ட நீட்-யுஜி 2026 தேர்வு ரத்து செய்யப்பட்டதைத் தொடர்ந்து, மத்திய அரசு பாதுகாப்பு நடவடிக்கைகளை அதிகரித்துள்ளது.

ஜூன் 21 அன்று நடைபெறவிருக்கும் நீட் யுஜி மறுதேர்வு வரையில், வினாத்தாள் தயாரிப்பாளர்கள், மதிப்பீட்டாளர்கள் மற்றும் மொழிபெயர்ப்பாளர்கள், பாதுகாப்பான ஓர் இடத்திற்கு மாற்றப்பட்டுள்ளனர். தேர்வு நடத்தப்படும் வரை அவர்கள் அங்கு தனிமைப்படுத்தப்பட்ட நிலையில் இருப்பார்கள்.

இந்த நடவடிக்கையின் ஒரு பகுதியாக, குறிப்பாக விரைவான போக்குவரத்து தேவைப்படக்கூடிய இடங்களில், எம்ஐ-17 ஹெலிகாப்டர்கள் மற்றும் பிற விமானங்கள் ஈடுபடுத்தப்படும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

அவை உரிய நேரத்தில் பாதுகாப்பாக சென்றடைவதை உறுதி செய்வதற்காக, இந்திய விமானப்படை 18 குறிப்பிட்ட இடங்களிலிருந்து நாடு முழுவதும் உள்ள தேர்வு மையங்களுக்குக் வினாத்தாள் தொகுப்புகளை கொண்டு செல்லும் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.