இந்தியா

இலவச சிகிச்சை அளிப்பதில் முன்னணி: கேரளாவுக்கு தேசிய விருது

இரண்டு ஆண்டுகளில் ரூ3ஆயிரத்து 200 கோடி மதிப்பிலான இலவச சிகிச்சை அளிக்கப்பட்டிருக்கிறது.அதிகபட்ச மக்களுக்கு இலவச சிகிச்சையளிக்க வேண்டும் என்பதே அரசின் கொள்கை.

திருவனந்தபுரம்:

மாநிலங்களில் உள்ள அரசு மருத்துவமனைகளில் சிறப்பான சேவையை ஊக்குவிக்கும் வகையில் மத்திய அரசின் சார்பில் ஆரோக்கிய மந்தன் விருது வழங்கப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு அந்த விருதை கேரள மாநிலம் வென்றுள்ளது. ஏராளமானோருக்கு இலவச சிகிச்சை அளிப்பதில் முன்னணியில் இருப்பதன் காரணமாக கேரளாவுக்கு தேசிய விருது கிடைத்துள்ளது.

கேரள மாநிலத்தில் அமல்படுத்தப்பட்டிருக்கும் காருண்ய ஆரோக்ய சுரக்க்ஷா என்ற திட்டம் மூலமாகவே ஆரோக்கிய மந்தன் விருது கேரளாவுக்கு கிடைத்திருக்கிறது. இந்த திட்டத்தின் மூலம் மக்கள் இலவச மருத்துவ சேவையை பெற முடியும். அந்த திட்டத்தில் இரண்டு ஆண்டுகளில் ரூ3ஆயிரத்து 200 கோடி மதிப்பிலான இலவச சிகிச்சை அளிக்கப்பட்டிருக்கிறது. 613 மருத்துவமனைகளின் மூலம் 13 லட்சம் பேர் பயனடைந்துள்ளனர்.

இதுகுறித்து கேரள மாநில சுகாதாரத்துறை மந்திரி வீணா ஜார்ஜ் கூறும்போது, அதிகபட்ச மக்களுக்கு இலவச சிகிச்சையளிக்க வேண்டும் என்பதே அரசின் கொள்கை. நிதி நெருக்கடிகள் இருந்தபோதிலும் ஏழை நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதை உறுதி செய்ய அரசு எடுத்துள்ள முயற்சிகள் மற்றும் நடவடிக்கைகளுக்கு இந்த விருது கிடைத்துள்ளது என்றார்.

SCROLL FOR NEXT