இந்தியா

எங்களை அனாதைகளாக்கி விட்டான்: வீர மரணம் அடைந்த நாயக்கின் தந்தை

எல்லையில் பாகிஸ்தான் தொடர்ந்து அத்துமீறி தாக்குதல் நடத்தி வருகிறது.நேற்றிரவு நடந்த துப்பாக்கிச் சண்டையில் ஆந்திராவைச் சேர்ந்த வீரர் மரணம்.

பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடியாக இந்தியா 7ஆம் தேதி (புதன்கிழமை) 1.05 மணி முதல் 1.30 மணி வரை 25 நிமிடத்தில் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள 9 பயங்கரவாத முகாம்களை துல்லியமாக தாக்கி அழித்தது. இந்த நடவடிக்கைக்கு ஆபரேஷன் சிந்தூர் என பெயரிட்டது.

எங்கள் மண்ணில் தாக்குதல் நடத்திய இந்தியாவுக்கு பதிலடி கொடுப்போம் என பாகிஸ்தான் தெரிவித்தது. இந்தியா ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையை மேற்கொண்டதில் இருந்து எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் தொடர்ந்து துப்பாக்கிச்சூடு நடத்தி வருகிறது.

நேற்றிரவு எல்லையில் துப்பாக்கிச்சூடு நடத்தி வந்த நிலையில், டிரோன் மற்றும் ஏவுகணைகள் மூலம் மக்கள் வசிக்கும் இடங்கள், வழிபாட்டு தலங்கள், ராணுவ நிலைகள் ஆகியவற்றை குறிவைத்து பாகிஸ்தான் தாக்குதல் நடத்த முயற்சி செய்தது. இதை இந்திய ராணுவம் தடுத்து நிறுத்தி முறியடித்தது.

நேற்று நள்ளிரவு (வெள்ளிக்கிழமை 2.00 மணி) ஜம்மு-காஷ்மீர் காட்டுப்பகுதியில் துப்பாக்கிச்சூடு நடைபெற்றது. இருதரப்பிலும் நடைபெற்ற துப்பாக்கிச்சூட்டில் ஆந்திராவை சேரந்த முடவத் முரணி நாயக் என்ற ராணுவ வீரர் வீர மரணம் அடைந்தார். இவர் அக்னிவீர் திட்டத்தின் கீழ் ராணுவத்தில் இணைந்தார்.

முரளி நாயக்கின் மரணம் அவரது தந்தையை உலுக்கியுள்ளது. ஏனென்றால் அவர் ஒரே மகன் ஆவார். இது தொடர்பாக அவரது தந்தை ஸ்ரீராம் நாயக் கூறியதாவது:-

எனது மகன் நாட்டிற்காக உயிர் நீத்துள்ளான். அவர் நாட்டிற்காக சண்டையிட்டுள்ளார். என்னை ஏன் கவலையில் ஆழ்த்தியுள்ளது என்றால், அவர் எங்களுக்கு ஒரே மகன். நாங்கள் அவனை சார்ந்திருந்தோம். எங்களது ஆதரவு போய்விட்டது. தற்போது நானும் எனது மகனும் அனாதையாகிவிட்டோம். தீர்வு எதுவாக இருந்தாலும், அதை நான் நாட்டின் முடிவுக்கே விட்டுவிடுகிறேன். எந்த முடிவை எடுப்பது என்பது நாட்டைப் பொறுத்தது.

இன்று காலை எனது மனைவி ஜோதி பாய்க்கு 9 மணியளவில் ராணுவ அதிகாரியிடம் இருந்து போன் வந்தது. அவர் இந்தியில் முரளி நாயக் உறவுப் பற்றி கேட்டார். அவர் முரளி நாயக் யார் என்று கேட்டார். எனது மனைவி, என்னுடைய மகன்தான் முரளி என்றார். அப்போது அந்த அதிகாரி என்னுடைய மனைவிடம் போனை என்னிடம் கொடுக்கச் சொன்னார். அவர் இந்தியில் பேசினார். அப்போது தனது மகன் வீர மரணம் அடைந்ததை தெரிவித்தார்" எனக் கூறினார்.

முரளி நாயக் கடந்த 2022ஆம் ஆண்டு ராணுவத்தில் இணைந்தார். 3 வருடம் பணியாற்றிய நிலையில் வீர மரணம் அடைந்துள்ளார்.