மகாராஷ்டிர மாநில அமைச்சர் சஞ்சய் சிர்சாத், சத்ரபதி சம்பாஜிநகர் (முன்பு அவுரங்காபாத்) மாநகராட்சி அலுவலகம் இருக்கும் இடம் முன்பு ஒரு கல்லறையாக இருந்தது என்று பகீரை கிளப்பியுள்ளார்.
இதனால் மாநகராட்சி அலுவலகம் இருக்கும் இடத்தில் ஆவிகள் நடமாட்டம் இருப்பதாகவும், அவை அங்கு வேலை செய்பவர்களை நிம்மதியற்றவர்களாக ஆக்குவதாகவும் அவர் கூறியுள்ளார். இதிலிருந்து விடுபட மாநகராட்சி அலுவலகத்தை வேறு ஒரு நல்ல இடத்திற்கு மாற்ற வேண்டும் என்று அவர் ஆலோசனை வழங்கியுள்ளார்.
மாநகராட்சியில் புதிதாக வாங்கப்பட்ட தீயணைப்பு வாகனத்தைத் தொடங்கி வைக்கும் விழாவில் பேசும்போது அவர் இந்த கருத்தை பதிவு செய்தார்.
இந்த கருத்திற்கு எதிர்க்கட்சிகள் மற்றும் சமூக வலைதளவாசிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். குடிநீர், சாலை வசதி போன்ற அடிப்படைப் பிரச்சனைகளில் இருந்து மக்களின் கவனத்தை திசைதிருப்பவே அமைச்சர் இதுபோன்ற அறிவியல் ஆதாரமற்ற மூடநம்பிக்கைகளைப் பேசுவதாக குற்றம் சாட்டியுள்ளனர்.