மும்பை:
டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணி நேற்று தாயகம் திரும்பியது. அவர்களுக்கு விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இதையடுத்து, இந்திய அணி வீரர்கள் பிரதமர் மோடியை சந்தித்து வாழ்த்து பெற்றனர்.
உலகக் கோப்பையுடன் நாடு திரும்பிய இந்திய அணிக்கு நேற்று வான்கடே மைதானத்தில் பாராட்டு விழா நடந்தது. முன்னதாக அலைகடலென குவிந்திருந்த ரசிகர்கள் மத்தியில் இந்திய அணி வீரர்கள் பயணித்த பேருந்து ஊர்ந்து வந்தது.
இதற்கிடையே, இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா மற்றும் கிரிக்கெட் வீரர்கள் சூர்யகுமார் யாதவ், ஷிவம் துபே, யஷஸ்வி ஜெய்ஸ்வால் ஆகியோர் மும்பையில் மகாராஷ்டிர முதல் மந்திரி ஏக்நாத் ஷிண்டேவை அவரது இல்லத்தில் சந்தித்தனர். அங்கு முதல் மந்திரி ஏக்நாத் ஷிண்டே அவர்களுக்கு சால்வை அணிவித்து பரிசு வழங்கினார்.
இந்நிலையில், மகாராஷ்டிரா மாநில சட்டசபையான விதான் பவனில் முதல் மந்திரி ஏக்நாத் ஷிண்டே தலைமையில் இந்திய கேப்டன் ரோகித் சர்மா உள்ளிட்ட மும்பை வீரர்களுக்கு பாராட்டு விழா நடைபெற்றது. இதில் ரோகித் சர்மா, சூர்யகுமார் யாதவ், ஷிவம் துபே மற்றும் யஷஸ்வி ஜெய்ஸ்வால் ஆகியோர் கலந்துகொண்டனர்.