மகாராஷ்டிர தலைநகர் மும்பையில் மசூதி மற்றும் நூற்றுக்கணக்கான வீடுகள் இடித்துத் தரைமட்டமாக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நேற்று, மும்பை பாந்த்ரா ஈஸ்ட் பகுதியில் உள்ள கரீப் நகர் சேரிப் பகுதியில் ரயில்வே துறைக்குச் சொந்தமான நிலத்தில் இருந்த சுமார் மற்றும் 500க்கும் மேற்பட்ட வீடுகளை மும்பை உயர்நீதிமன்ற தீர்ப்பின்படி ரயில்வே அதிகாரிகள் இடித்துத் தரைமட்டமாக்கினர்.
அப்பகுதியில் இருந்த மூன்று மாடி மசூதி மற்றும் அதனுடன் இணைந்த கட்டிடங்களை அதிகாரிகள் இடிக்கத் தொடங்கினர்.
இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து, அப்பகுதியைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான இஸ்லாமிய மக்கள் சம்பவ இடத்தில் திரண்டு தங்களது எதிர்ப்பை வெளிப்படுத்தினர். அவர்கள் மீது காவல்துறையினர் தடியடி நடத்தினர். இதில் பலர் காயமடைந்து மருதுவானமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
பொதுமக்கள் தரப்பிலிருந்து போலீசார் மீது கல்வீச்சுத் தாக்குதல் நடத்தப்பட்டதாலேயே, நிலைமையைக் கட்டுக்குள் கொண்டுவரத் தடியடி நடத்த வேண்டியிருந்தது என்று நிர்மல் நகர் காவல் ஆய்வாளர் ரமேஷ் வாக் தெரிவித்துள்ளார். வன்முறை தொடர்பாக இதுவரை 15 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்தத் தடியடியின் போது, காவல்துறையினர் முதியவர்கள் மற்றும் பெண்கள் மீதும் தடியடி நடத்திய வீடியோக்கள் சமூக வலைதளங்களில் பரவி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன.
குறிப்பாக, வயது முதிர்ந்த ஒரு பெண்ணின் தலையில் போலீசார் லத்தியால் கொடூரமாகத் தாக்கும் காட்சிகள் வெளியாகியுள்ளன.
எவ்வித முன்னறிவிப்போ அல்லது கால அவகாசமோ வழங்காமல் அதிகாரிகள் இடிப்பு நடவடிக்கையை மேற்கொண்டதாக மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
அசம்பாவிதங்களை தடுக்க அப்பகுதியில் ரயில்வே பாதுகாப்புப் படை படையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.