இந்தியா

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர்: தொடர் அமளியால் இரு அவைகளும் ஒத்திவைப்பு

தொடர் அமளியால் மாநிலங்களவை பிற்பகல் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் கடந்த மாதம் ஜூலை 20ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. கூட்டம் தொடங்கிய முதல் நாள் முதலே எதிர்க்கட்சிகளின் அமளி நீடித்து வருகிறது.

இந்நிலையில், நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில் 11வது நாளான இன்று நீட் முறைகேடு விவகாரம், மாணவர் போராட்டங்கள் மீதான போலீஸ் நடவடிக்கை, ராமர் கோவில் நன்கொடை விவகாரம் உள்ளிட்ட பிரச்சினைகளை எதிர்க்கட்சிகள் எழுப்பினர்.

அப்போது, எதிர்க்கட்சி உறுப்பினர்ள் முழக்கமிட்டனர். இதனால், அவை நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டன. தொடக்கத்திலேயே ஏற்பட்ட அமளியால் மக்களவை நண்பகல் 12 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.

இதேபோல், மாநிலங்களவையிலும் எதிர்க்கட்சி உறுப்பினர்களின் கோஷங்களால் அவை பாதிக்கப்பட்டது. தொடர் அமளியால் மாநிலங்களவை பிற்பகல் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது. இதற்கிடையே, இன்று முக்கிய மசோதாக்களை நிறைவேற்றும் முயற்சியில் மத்திய அரசு ஈடுபட்டுள்ளது.

மக்களவையில் இந்திய புள்ளியியல் நிறுவனம் மசோதா, 2026 மற்றும் வங்கியாளர்களின் ஆவண சான்று மசோதா, 2026 ஆகியவை அறிமுகப்படுத்தப்பட உள்ளன.

மாநிலங்களவையில் பிறப்பு-இறப்பு பதிவுகள் (திருத்தம்) மசோதா, 2026 மற்றும் உச்சநீதிமன்ற நீதிபதிகள் எண்ணிக்கை (திருத்தம்) மசோதா, 2026 ஆகியவை தாக்கல் செய்ய திட்டமிட்டுள்ளது.

மேலும், வெளிநாட்டு நிதியுதவி ஒழுங்குமுறை (FCRA) திருத்த மசோதாவும் தாக்கல் செய்யப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது.

நாடாளுமன்றக் கூட்டத்தொடருக்கு இன்னும் சில வேலை நாட்கள் மட்டுமே எஞ்சியுள்ள நிலையில், அவையில் தொடர்ந்து அமளி நீடித்து வருகிறது.