பாராளுமன்ற மக்களவை தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. பா.ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி சுமார் 290 தொகுதிகளை வாய்ப்புள்ளது. இந்தியா கூட்டணி 235 தொகுதிகளை பிடிக்கும் வாய்ப்புள்ளது.
பா.ஜனதா கூட்டணியில் உள்ள ஒன்றிரண்டு கட்சிகளை தங்கள் பக்கம் இழுத்து பாஜக ஆட்சி அமைக்க நெருக்கடி கொடுக்க இந்தியா கூட்டணி முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. இதனால்தான் ராகுல் காந்தி மற்றும் மல்லிகார்ஜூன கார்கே ஆகியோர் ஆட்சி அமைப்பதற்கான வியூகம் அமைப்போம் எனத் தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில் டெல்லியில் உள்ள பா.ஜனதா தலைமை அலுவலகத்தில் வெற்றிக் கொண்டாட்டம் நடைபெற்றது. இதில் பிரதமர் மோடி, பா.ஜனதா தலைவர் ஜே.பி. நட்டபா, அமித் ஷா, ராஜ்நாத் சிங் ஆகியோர் கலந்து கொண்டனர்.
பிரதமர் மோடி அலுவலகம் வரும்போது வெற்றிக்கான இரட்டை விரலை காண்பித்து உற்சாகத்துடன் வந்தார். இந்த வெற்றி கொண்டாட்ட விழாவில் ஜே.பி. நட்டா பேசும்போது "தேர்தலாக இருந்தாலும் சரி, நாட்டை வழிநடத்துவதாக இருந்தாலும் சரி, பிரதமர் மோடி எப்போதும் நாட்டையும், கட்சியையும், மக்களையும் முன்னணியில் இருந்து வழிநடத்தி வருகிறார் என்பது நாம் அனைவரும் அறிந்ததே. அவரை வாழ்த்துகிறேன்.
ஆந்திராவில் கூட்டணி கட்சிகளுடன் இணைந்து தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு அமையப் போகிறது. கேரளாவில் தாமரை மலர்ந்தது. நமது வாக்கு அதிகரித்துள்ளது. 2014-ல் ஒரு சரித்திரம் நடந்தது, ஏழைத் தாயின் மகன் நாட்டின் பிரதமரானார்.
முதன்முறையாக என்டிஏ கூட்டணி தொடர்ந்து மூன்றாவது முறையாக ஆட்சி அமைக்கப் போகிறது. சிலருக்கு தங்கள் சுயநலமே முக்கியம். அவர்களை நாடு நிராகரிக்கிறது. மேற்கு வங்கத்தில் நாங்கள் முன்னேறினோம். 3-ல் இருந்து 77 இடங்களை பெற்றோம். தற்போது முதல்முறையாக ஒடிசாவில் பாஜக ஆட்சி அமைக்க போகிறது. 30-40 இடங்களில் வெற்றிபெறும் சிலர் நாடு மோடியுடன் எப்படி நிற்கிறது என்பதை மறந்துவிட்டு அதைக் கொண்டாடத் தொடங்குகிறார்கள். மோடி 3-வது முறையாக பிரதமராக பதவி ஏற்பார்" எனத் தெரிவித்துள்ளார்.
பின்னர் பிரதமர் மோடி பேசினார். அப்போது அவர் கூறுகையில் "எனக்கு ஆசி வழங்கியதற்கான நாட்டு மக்கள் அனைவருக்கும் நன்றி. 140 கோடி மக்களுக்கான வெற்றி இது. இது ஜனநாயகத்திற்கான மிகப்பெரிய வெற்றி. பா.ஜனதா 3-வது முறையாக ஆட்சி அமைக்க போகிறது. தேர்தல் ஆணையத்திற்கு நன்றி. நாட்டின் அரசியலமைப்புக்கு கிடைத்த வெற்றி. கடும் வெப்பத்திற்கு இடையே தேர்தல் ஆணையம் தனது கடமையை சிறப்பாக செய்துள்ளது.