இந்தியா

பிரான்ஸ் ஜி-7 மாநாட்டில் மோடி- டிரம்ப் மெகா சந்திப்பு? உலக அரங்கில் பெரும் எதிர்பார்ப்பு

ஜி-7 மாநாட்டின்போது அமெரிக்க அதிபர் டிரம்ப்- பிரதமர் மோடி இடையிலான சந்திப்பு நடைபெற வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

பிரான்ஸ் நாட்டில் அடுத்த மாதம் (ஜூன் 15- 17) ஜி-7 உச்சி மாநாடு நடைபெற உள்ளது. இந்த மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடியும், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பும் நேருக்கு நேர் சந்தித்துப் பேச வாய்ப்புள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

கடந்த 2025 பிப்ரவரி மாதம் டிரம்ப் மீண்டும் அதிபராகப் பொறுப்பேற்ற போது, வெள்ளை மாளிகையில் பிரதமர் மோடி அவரைச் சந்தித்து வாழ்த்துகளை தெரிவித்தார். அதற்குப் பிறகு இரு தலைவர்களும் எந்தவொரு உலகளாவிய மாநாட்டிலும் சந்திக்கவில்லை என்பதால், ஓராண்டு கழித்து இந்த இரு தலைவர்களும் சந்திப்பார்களா என்ற எதிர்பார்ப்பு அனைவரிடமும் நிலவி வருகிறது.

கடந்த ஆண்டு மே மாதம் இந்தியா- பாகிஸ்தான் இடையே போர் சூழல் ஏற்பட்டு வந்தது. இதற்கு அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், இந்தியா - பாகிஸ்தான் இடையேயான மோதலைத் தடுத்து நிறுத்தியதற்காக தனக்கு 'நோபல் பரிசு' வழங்கப்பட வேண்டும் என்றார். ஆனால் பாகிஸ்தான் கெஞ்சியதால் போரை நிறுத்தினோம். 3-வது நாடு தலையீடு இல்லை என்று இந்திய பிரதமர் பதில் அளித்தார்.

2025-ம் ஆண்டு ஜூன் மாதம் கனடா ஜி-7 மாநாட்டிற்குப் பிறகு, வாஷிங்டன் வருமாறு மோடிக்கு டிரம்ப் அழைப்பு விடுத்தார். ஆனால், அதே நேரத்தில் பாகிஸ்தான் ராணுவ தளபதி ஆசிம் முனீரும் அங்கு அழைக்கப்பட்டிருந்ததால், டிரம்பின் "புகைப்பட அரசியல்" சூழ்ச்சிக்கு ஆளாக விரும்பாமல் இந்தியா அந்த அழைப்பை நிராகரித்தது.

டிரம்பின் நிபந்தனைகளுக்குப் பிரதமர் மோடி பணிய மறுத்ததாலும், ரஷியாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்கியதாலும் கோபமடைந்த அமெரிக்கா, இந்தியப் பொருட்கள் மீது 25% வரை கூடுதல் சுங்கவரிகளை விதித்தது. எனினும், பிரதமர் மோடி டிரம்பின் மிரட்டல்களுக்குப் பணியாமல் மௌனம் காத்தார். இதனால் டிரம்ப்- மோடி நட்பில் சிறிய கீறல் ஏற்பட்டது எனலாம்.

கடந்தமாதம் பிரதமர் மோடியின் பிறந்தநாளுக்கு அதிபர் டிரம்ப் வாழ்த்து தெரிவித்தார். பிறகு இந்தியா - பாகிஸ்தான் இடையே உள்ள பதற்றம் குறைந்தது. இதை விளைவாக, இந்த ஆண்டு பிப்ரவரியில் சுங்கவரிகள் 18% ஆக குறைக்கப்பட்டன. பிறகு "இந்தியாவைச் சேர்ந்த என் சிறந்த நண்பர்" என்று மோடியை டிரம்ப் மீண்டும் பாராட்டத் தொடங்கினார்.

கடந்த ஏப்ரல் 17 அன்று இரு தலைவர்களும் 40 நிமிடங்கள் தொலைபேசியில் தொடர்பு கொண்டு இருதரப்பு உறவுகள் மற்றும் மத்திய கிழக்கு நாடுகளின் பதற்றமான சூழ்நிலை குறித்து மிக முக்கிய ஆலோசனை நடத்தியுள்ளனர்.

அடுத்த மாதம் பிரான்சில் இரு தலைவர்களும் நேரில் சந்திக்கும்போது, தடைபட்டுள்ள இந்தியா- அமெரிக்கா இடையேயான மெகா வர்த்தக ஒப்பந்தம் இறுதி செய்யப்படுமா என்ற எதிர்பார்ப்பு வர்த்தக உலகினரிடையே எழுந்துள்ளது.