டெல்லி செங்கோட்டையில் நேற்று நடைபெற்ற 80வது சுதந்திர தின விழாவில் பிரதமர் மோடியின் தோற்றமும் உரையில் ஏற்பட்ட தடுமாற்றமும் விவாதப்பொருளாகி வருகிறது.
இந்தியாவில் 2009-10 ஆம் நிதியாண்டில் 25 லட்சம் மின்சார வாகனங்கள் விற்கப்பட்டதாக முதலில் தவறாக குறிப்பிட்ட பிரதமர் மோடி, உடனடியாக தன்னை திருத்திக் கொண்டு, அது 1.5 லட்சம் என்று கூறினார்.
தொடர்ந்து, 2025-26 ஆம் ஆண்டில் மின்சார வாகனங்களின் விற்பனை 25 லட்சமாக உயர்ந்துள்ளது என்று குறிப்பிட்டார்.
ஆம் ஆத்மி தேசிய ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால் தனது எக்ஸ் தளப் பதிவில், "நம்பிக்கையற்ற, பதற்றமான மற்றும் நடுங்கும் நிலையில் உள்ள ஒரு பிரதமராக மோடி காட்சியளிக்கிறார்" என குறிப்பிட்டுள்ளார்.
பிரதமரின் பேச்சு மட்டுமின்றி, அவரது சட்டை பாக்கெட் மீது சதுர வடிவ துணியில் தேசிய கொடியானது தலைகீழாக (இதில் இடமிருந்து வலமாக) இடம்பெற்றிருந்தது. முதலில் இருக்க வேண்டிய ஆரஞ்சு வண்ணம் கடைசியிலும், கடைசியில் இருக்க வேண்டிய பச்சை வண்ணம் முதலிலும் உள்ளது.
இது அயர்லாந்து தேசியக் கொடியை ஒத்ததாக இருப்பதை சுட்டிக்காட்டி காங்கிரஸ் விமர்சித்துள்ளது.
காங்கிரஸ் தேசிய செய்தி தொடர்பாளர் பவன் கேரா தனது எக்ஸ் பதிவில், " பிரதமர் உருது மொழியில் மூவர்ணக் கொடியை அணிந்திருப்பது போல் தெரிகிறது.
அல்லது இந்தியாவுக்குப் பதிலாக அயர்லாந்தின் சுதந்திர தினத்தைக் கொண்டாடுகிறாரா எனத் தெரியவில்லை." என கிண்டலாக குறிப்பிட்டுள்ளார். உருது மொழி இடமிருந்து வலமாக எழுதப்படுவது குறிப்பிடத்தக்கது.