இந்தியா

அக்னிபாத் திட்டத்தில் பணிபுரிந்தவர்களுக்கு மத்திய ஆயுத போலீஸ் படையில் 10 சதவீத இடஒதுக்கீடு

23 வயதிற்கு உட்பட்ட இளைஞர்கள் நான்கு வருடம் ராணுவத்தில் பணிபுரிய முடியும்.பின்னர் 25 சதவீதம் பேர் 15 ஆண்டுகள் பணிகள் நீடிப்பதற்கான வாய்ப்பும் உள்ளது.

அக்னிபாத் திட்டத்தை எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்து வருகின்றன. ராணுவ வீரர்களை பயன்படுத்திவிட்டு தூக்கி எறிவது. அவர்களுக்கு தியாகிகள் என்ற பெயர் கிடைக்காது எனக் கூறினர். ஆனால் மத்திய மந்திரிகள் அமித் ஷா மற்றும் ராஜ்நாத் சிங் ஆகியோர் இந்த திட்டத்தை ஆதரித்து பேசி வருகின்றனர்.

இந்த நிலையில் அக்னிபாத் திட்டத்தின்கீழ் பணிபுரிந்த முன்னாள் அக்னிவீர்களுக்கு (வீரர்கள்) மத்திய ஆயுத போலீஸ் படையின் கான்ஸ்டபிள் வேலைகளில் 10 சதவீத இடஒதுக்கீடு வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல் மத்திய தொழில்துறை பாதுகாப்புப்படையில் (Central Industrial Security Force) உடல்திறன் தேர்வில் இருந்து விலக்கு அளிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சிஐஎஸ்எஃப் டைரக்டர் ஜெனரல் நீனா சிங், இது தொடர்பாக அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

அக்னிபாத் திட்டம் 2022-ம் ஆண்டு ஜூன் 14-ந்தேதி அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த திட்டத்தின் கீழ் முப்படைகளுக்கும் 17 1/2 வயது முதல் 21 வரையிலான இளைஞர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். இவர்கள் நான்கு வருடம் பணிபுரிந்த பின்னர் வெளியேறிவிடுவார்கள். அதன்பின் 15 வருடத்திற்கு 25 சதவீதம் பேரை தக்கவைத்துக் கொள்ளும் வகையில் இத்திட்டம் அமைந்துள்ளது. வயது வரம்பை பின்னர் 23 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

ஒருவேளை பணிக்காலத்தின்போது உயிரிழந்தால் இழப்பீடாக ஒரு கோடி ரூபாய் வழங்கப்படும் என நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தபோது ராஜ்நாத் சிங் தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT