பிரதான் மந்திரி உஜ்வாலா திட்த்தின் கீழ் எழை பெண்களுக்கு மத்திய அரசு 12 சிலிண்டர் வழங்கி வந்தது. கடந்த ஆண்டு இதை 9 ஆக குறைத்தது. தற்போது ஹார்முஸ் சலசந்தி விவகாரத்தில் எரிபொருள் தட்டுப்பாடு கடுமையாக பாதித்துள்ளது. இதனால் நேற்று 9 சிலிண்டர் என்பதை 4 சிலிண்டராக குறைத்துள்ளது. இதற்கு மத்திய அரசு மீது எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றன.
காங்கிரஸ் கட்சி தேசிய தலைவர் கார்கே இது தொடர்பாக கூறியதாவது:-
மோடி அரசின் வறுமையை ஒழிப்போம் பிரசாரத்தின் எதார்த்தம் என்னவெனில், மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பின் கீழ் ஏழைகளுக்கு வழங்கப்பட்டு வந்த உரிமையை பறித்தது. தற்போது, அவர்களுடைய ஒருவேளை உணவும் பறிக்கப்பட்டுள்ளது.
சிலிண்டர்களை கைவிட நிர்பந்திக்கப்பட்ட தாய்மார்களும் சகோதரிகளும், பாரம்பரிய அடுப்புகளுக்குத் திரும்ப வேண்டிய கட்டாயத்திற்கு உள்ளாகியுள்ளனர். அதே சமயம், அவர்களின் அவல நிலையை கண்டு முதலை கண்ணீர் வடிக்கும் மோடி அரசாங்கமோ அதிகார போதையில் மூழ்கியுள்ளது.
இவ்வாறு கார்கே தெரிவித்துள்ளார்.