பீகார் மாநிலம், முசஃபர்பூர் நகரில் உள்ள தனியார் மருத்துவமனையில் இன்று அதிகாலை திடீரென பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீ விபத்தில் இதுவரை 4 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் பலர் காயமடைந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
முசஃபர்பூரில் அமைந்துள்ள பிரசாத் மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் இந்த தீ விபத்து ஏற்பட்டது. தீ வேகமாக பரவியதால் நோயாளிகள் மற்றும் அவர்களது உறவினர்கள் பதற்றத்திற்குள்ளாகினர். தகவலறிந்த தீயணைப்பு மற்றும் மீட்புப் படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீயை கட்டுக்குள் கொண்டு வந்ததுடன், பலரை பாதுகாப்பாக மீட்டனர்.
இந்த விபத்தில் 4 பேர் உயிரிழந்ததாகவும், மேலும் சிலர் சிகிச்சை பெற்று வருவதாகவும் மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. தீ விபத்துக்கான காரணம் உடனடியாக தெரியவராத நிலையில், மின்கசிவு உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் விசாரணை நடைபெற்று வருகிறது.
இந்த சம்பவம் பீகாரில் மருத்துவமனைகளின் தீ பாதுகாப்பு நடைமுறைகள் குறித்து மீண்டும் கேள்விகளை எழுப்பியுள்ளது. இந்த தீ விபத்து சம்பவம் எதிரொலியாக அதிகாரிகள் விரிவான விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளனர்.