இந்தியா

Love Issue | காதலர் தான் வேண்டும்... திருமணமான பெண் மொபைல் டவரில் ஏறியதால் பரபரப்பு!

உள்ளூர் மக்கள் மற்றும் அதிகாரிகள் மத்தியில் பீதி ஏற்பட்டது.

உத்தர பிரதேசத்தின் ஹத்ராஸ் மாவட்டத்தில், திருமணமான பெண் ஒருவர் தனது காதலனுடன் இருப்பதற்காக, மொபைல் கோபுரத்தின் மீது ஏறி, கிட்டத்தட்ட மூன்று மணி நேரம் பரபரப்பை ஏற்படுத்தினார்.

சஸ்னி காவல் நிலையப் பகுதியிலுள்ள லுட்சன் சாலையில் இந்தச் சம்பவம் நிகழ்ந்தது. அங்கு, சுமார் 30 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் கோபுரத்தின் உச்சிக்கு ஏறியதால், உள்ளூர் மக்கள் மற்றும் அதிகாரிகள் மத்தியில் பீதி ஏற்பட்டது.

காவல்துறை தகவல்படி, பூஜா என அடையாளம் காணப்பட்ட அந்த பெண்ணுக்கு, சுமார் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு ஹத்ராஸ் சந்திப்புக்குட்பட்ட பர்மானே கிராமத்தை சேர்ந்த ஒருவருடன் திருமணம் நடந்துள்ளது. அவர் நேற்று (செவ்வாய்க்கிழமை) மதியம் தனது மாமியார் வீட்டில் இருந்து புறப்பட்டு, செல்லும் வழியில் கோபுரத்தின் மீது ஏறியதாக தெரிகிறது.

சஸ்னி காவல் நிலைய அதிகாரி விபின் சௌத்ரி, தீயணைப்பு படையினருடன் சம்பவ இடத்திற்கு சென்று, அவரைக் கீழே இறங்குமாறு பலமுறை வற்புறுத்தினார். இருப்பினும், அவர் பல மணி நேரம் கீழே இறங்க மறுத்துவிட்டார்.

"அவருக்கு அறிவுரை வழங்கப்பட்ட பிறகு, இறுதியில் அவர் பாதுகாப்பாக கீழே இறக்கப்பட்டார்," என்று கூறிய சௌத்ரி, அந்த பெண் சுமார் மூன்று மணி நேரம் கோபுரத்தின் உச்சியில் இருந்ததாகவும் குறிப்பிட்டார்.

முதற்கட்ட விசாரணையில், அப்பெண் தனது திருமண வாழ்வில் மகிழ்ச்சியின்றி இருந்ததாகவும், அருகிலுள்ள கிராமத்தை சேர்ந்த மற்றொரு ஆணுடன் வாழ விரும்பியதாகவும் தெரியவந்துள்ளது என காவல்துறையினர் தெரிவித்தனர்.