ஜார்க்கண்ட் மாநிலம் லுட்டு பகுதியை சேர்ந்தவர் பிரிஜேஷ் கஞ்சூ. மாவோயிஸ்ட் தளபதியான இவர் ஜார்க்கண்டில் தடைசெய்யப்பட்ட அமைப்பான திரிதிய பிரஸ்துதி கமிட்டியின் தலைவராக இருந்தார்.
தலைமறைவாக இருந்த அவரை பற்றி தகவல் கொடுத்தால் ரூ.30 லட்சம் பரிசு அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில் பிரிஜேஷ் கஞ்சூ, உத்தரபிரதேச மாநிலம் வாரணாசியில் பதுங்கி இருப்பது போலீசாருக்கு தெரியவந்தது. இன்று காலை வாரணாசியின் ராம்நகர் பகுதியில் பிரிஜேஷ் கஞ்சூ தனது கூட்டாளி ஒருவருடன் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.
அப்போது அவரை போலீசார் பிடிக்க முயன்றனர். உடனே போலீசார் மீது பிரிஜேஷ் கஞ்சூ துப்பாக்கியால் சுட்டனர். இதையடுத்து போலீசார் துப்பாக்கி சூடு நடத்தினர். இதில் பிரிஜேஷ் கஞ்சூ உயிரிழந்தார்.