இந்தியா

விவாதத்தை ஏற்படுத்திய அரசு பஸ் கண்டக்டரின் சில்லறை பாக்கி

கண்டக்டர்கள் பணியை தொடங்கும் முன்பு போதிய சில்லறையை வாங்கி வைத்து கொள்ள வேண்டும்.பதிவு இணையத்தில் வெளியாகி 71 ஆயிரத்திற்கும் அதிகமான பார்வைகளை பெற்றது.

அரசு பஸ்களில் பயணம் செய்யும் போது கண்டக்டர் சில்லறை இல்லை என கூறுவதும், அவருடன் பயணிகள் வாக்குவாதத்தில் ஈடுபடுவதையும் பார்த்திருப்போம். இதுதொடர்பாக பெங்களூருவை சேர்ந்த நிதின்கிருஷ்ணா என்ற பயணி எக்ஸ் தளத்தில் தனது பெங்களூரு மாநகர பஸ் டிக்கெட்டை பகிர்ந்து ஒரு பதிவு செய்துள்ளார்.

அதில், நான் 5 ரூபாயை இழந்துவிட்டேன். வெறும் 5 ரூபாய் என்று பார்த்தால் அது சிறிய தொகையாக இருக்கும். அதுவே ஐந்து, ஐந்து என்று ஐந்து லட்சம் 5 ரூபாய் என்று நினைத்து பார்த்தால் பெரிய கொள்ளை தானே! பஸ் கண்டக்டர்களின் இந்த நடவடிக்கை கோபத்தை ஏற்படுத்துகிறது. இதை வழக்கமாக வைத்து அவர்கள் அதிகம் சம்பாதிக்க நினைக்கிறார்கள்.

கண்டக்டர்கள் பணியை தொடங்கும் முன்பு போதிய சில்லறையை வாங்கி வைத்து கொள்ள வேண்டும். அல்லது அதற்கு மாற்றாக ஆன்லைன் பரிவர்த்தனை ஆப்ஷன்களை தர வேண்டும் என கூறி உள்ளார். அவரது இந்த பதிவு இணையத்தில் வெளியாகி 71 ஆயிரத்திற்கும் அதிகமான பார்வைகளை பெற்றது. பயனர்கள் பலரும் தங்களது பயணத்தின் போது நேர்ந்த அனுபவங்களை பதிவிட்டனர்.

சில பயனர்கள் பஸ் ஏறும் போது நாம் தான் சில்லறைகளை வைத்து கொள்ள வேண்டும் எனவும், சில பயனர்கள், அரசு பஸ்களில் ஆன்லைன் பரிவர்த்தனையை பயன்படுத்த வேண்டும் எனவும் பதிவிட்டனர். இதனால் அவரது பதிவு விவாதத்தை ஏற்படுத்தி உள்ளது.