இந்தியா

மாம்பழப் பிரியர்களுக்கு கொண்டாட்டம்! உலகையே சுவைக்க வைக்கும் லக்னோ மாம்பழங்கள்!' – சீசன் ஆரம்பம்!

"இது வெறும் ட்ரெய்லர் தான், மெயின் பிக்சர் இனிமேதான்!" - 45 ரகங்கள் மாம்பழங்கள் வரவுள்ளதாக வியாபாரிகள் தகவல்.

உத்தரப் பிரதேச மாநிலம் லக்னோவில் உலகப் புகழ்பெற்ற மலிஹாபாடி தாஷேரி (Malihabadi Dasheri) ரக மாம்பழங்கள் சந்தைக்கு வரத் தொடங்கியுள்ளதால், இந்த ஆண்டுக்கான மாம்பழ சீசன் வியாபாரம் அங்கு களைகட்டத் தொடங்கியுள்ளது.

லக்னோவின் மொத்த விற்பனைச் சந்தைகளில் தற்போது மாம்பழங்கள் குவியத் தொடங்கியுள்ளன.

தற்போது சந்தைக்கு வந்துள்ள மாம்பழங்களில் தாஷேரி ( Dasheri) மட்டுமன்றி சௌசா (Chausa), ஆம்ரபாலி (Amrapali), சுர்கா (Surkha), தோதாபுரி (Totapuri) போன்ற மாம்பழ வகைகள் கண்ணை பறிக்கும் அளவிற்கு பரவலாகக் காணப்படுகின்றன.

மாம்பழங்களின் வரத்து அதிகரித்துள்ளதால் மொத்த மற்றும் சில்லறை வியாபாரிகள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

தங்கள் பகுதியில் விளையும் மாம்பழங்களுக்கு உலக அளவில் பெரும் வரவேற்பு உள்ளதாகவும், இங்கிருந்து அமெரிக்கா மற்றும் சவுதி அரேபியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளுக்கு மாம்பழங்கள் தொடர்ந்து ஏற்றுமதி செய்யப்பட்டு வருவதாகவும் மாம்பழ வியாபாரத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் தெரிவிக்கின்றனர்.

மாம்பழ சீசன் தற்போதுதான் களைக்கட்ட தொடங்கியுள்ளதாகவும், நாட்கள் செல்லச் செல்ல வரத்து இன்னும் பல மடங்கு அதிகரிக்கும் என்றும், வரும் வாரங்களில் மட்டும் சுமார் 40 முதல் 45 வெவ்வேறு வகையான அரிய மாம்பழ ரகங்கள் சந்தைக்கு விற்பனைக்காக வரவுள்ளதாகவும் அவர்கள் கூறியுள்ளனர்.

உலகப் புகழ்பெற்ற மலிஹாபாடி மாம்பழங்களின் வரத்து தொடங்கியுள்ளதால், லக்னோ சந்தைகளில் மக்கள் மற்றும் வியாபாரிகளின் கூட்டம் அதிகரித்துள்ளது.