இந்தியா

பெற்ற மகளின் காதலனை கொன்ற தந்தை, மகனுக்கு ஆயுள் தண்டனை

தாக்குதலில் ஏற்பட்ட காயங்களால் கிஷன் பின்னர் உயிரிழந்தார்.

2023-ஆம் ஆண்டு நடந்த ஒரு கொலை வழக்கில், தந்தை மற்றும் இரண்டு மகன்கள் என மூன்று பேருக்கு ஆயுள் தண்டனையும், அவர்கள் ஒவ்வொருவருக்கும் தலா ரூ.51,000 அபராதமும் விதித்து உத்தர பிரதேச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது.

அரசு வழக்கறிஞர் பிரவேந்திர சிங் கூற்றுப்படி, இந்த வழக்கு திபாய் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட தௌராவ் கிராமத்தை சேர்ந்த கிஷன் என்ற காலுவின் மரணம் தொடர்பானது.

கிஷன் தனது அண்டை வீட்டுக்காரரான மகேஷ் குமாரின் மகளுடன் உறவில் இருந்ததாகக் கூறப்படுகிறது. 2023 மார்ச் 27 ஆம் தேதி இரவு, கிஷன் அந்த பெண்ணை அவரது வீட்டில் சந்திக்க சென்றதாகக் கூறப்படுகிறது. அங்கு அவரை அப்பெண்ணின் தந்தை மற்றும் சகோதரர்களான சந்தோஷ், ராஜ்குமார் ஆகியோர் பார்த்துள்ளனர்.

குற்றம் சாட்டப்பட்ட மூவரும் கிஷனை தடிகளால் தாக்கியதில், அவருக்கு பலத்த காயங்கள் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. தாக்குதலில் ஏற்பட்ட காயங்களால் கிஷன் பின்னர் உயிரிழந்தார். கிஷனின் தந்தை போஜ்ராஜ் அளித்த புகாரைத் தொடர்ந்து, குற்றம் சாட்டப்பட்ட மூவர் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

இந்த வழக்கு விசாரணை முடிவில் கைது செய்யப்பட்ட மூன்று பேரும் குற்றவாளிகள் என கண்டறிந்த கூடுதல் மாவட்ட மற்றும் அமர்வு நீதிபதி ராஜேஷ் குமார், குற்றவாளிகளுக்கு ஆயுள் தண்டனையும், தலா ரூ.51,000 அபராதமும் விதித்தார் என்று அரசுத் தரப்பு வழக்கறிஞர் தெரிவித்தார்.