இந்தியா

பலாத்காரத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ரேட்கார்டு நிர்ணயித்துள்ளார்: மம்தாவை கடுமையாக விமர்சித்த வழக்கறிஞர்

பலாத்காரத்தால் பாதிக்கப்பட்டவர்களை உடனடியாக சந்திக்க விரும்புகிறார்.மம்தா பானர்ஜி சாட்சிகளை வாங்க முயற்சிக்கிறார்.

கொல்கத்தா ஆர்.ஜி. கர் மருத்துக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் பயிற்சி டாக்டராக இருந்து வந்த பெண் ஒருவர் வன்கொடுமை செய்யப்பட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் நாட்டையே உலுக்கியுள்ளது.

இந்த விவகாரத்தில் மம்தா அரசு மீது கடும் விமர்சனம் எழுப்பப்பட்டு வருகிறது. அரசியல் இயந்திரம் சரியாக செயல்படவில்லை. அவர் முதல்வர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என வலியுறுத்தப்பட்டு வருகிறது.

இந்த வழக்கை சிபிஐ விசாரணை நடத்தி வருகிறது. குற்றவாளிக்கு தூக்குத்தண்டனை வழங்கப்பட வேண்டும் என மம்தா வலியுறுத்தி வருகிறார்.

இந்த நிலையில் கற்பழிப்பால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ரேட் கார்டு நிர்ணயித்துள்ளார் என மம்மா பானர்ஜி மீது கொலை செய்யப்பட்ட பெண் குடும்பத்தின் வழக்கறிஞர் கடுமையாக விமர்சித்துள்ளார்.

இது தொடர்பாக கொலை செய்யப்பட்ட பெண்ணின் குடும்பத்தினருக்காக வாதாடும் வழக்கறிஞர் பிகாஸ் ரஞ்சன் பட்டச்சார்யா கூறியதாவது:-

மேற்கு வங்காள முதல்வரின் செயல்பாடு கண்டிக்கத்தக்கது. கற்பழிப்பு சம்பவம் நடக்கும்போதெல்லாம், பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினரை உடனடியாக சந்திக்க மம்தா பானர்ஜி விரும்புகிறார். அவர்களுக்கு பணம் கொடுக்கப்படுகிறது. அதன்பின் எல்லாம் முடிந்தது எனச் சொல்கிறார்கள். கற்பழிப்பால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ரேட் கார்டு நிர்ணயித்துள்ளார். இது துரதிருஷ்டவசமானது. சாட்சிகளை விலைக்கு வாங்கும் முயற்சியில் ஈடுபடுகிறார்.

இவ்வாறு வழக்கறிஞர் தெரிவித்தார்.

பாதிக்கப்பட்ட பெண் டாக்டரின் பெற்றோர் நேற்று முன்தினம் (ஞாயிறு) "முதல்வர் மம்தா பானர்ஜி மீது நம்பிக்கை இருந்தது. தற்போது இந்த நம்பிக்கை போய்விட்டது. உடலை பார்த்தால் யாரும் இது கொலை வழக்கு என்றுதான் சொல்வார்கள். ஆனால், மருத்துவத்துறையில இருந்து, எங்களது மகள் தற்கொலை செய்து கொண்டார் என தெரிவித்ததாக மம்தா பானர்ஜி எங்களிடம் தெரிவித்தார். எங்களது மகள் உடல் அவசர அவசரமாக தகனம் செய்யப்பட்டது. மூன்று உடல்கள் இருந்தன. அதில் எங்களது மகள் உடன் முதலாவதாக தகனம் செய்யப்பட்டது" எனத் தெரிவித்தனர்.