மேற்குவங்க மாநில திரிணாமுல் காங்கிரஸ் கட்சித் தலைவர் மம்தா பானர்ஜி நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் தோல்வி அடைந்தார். இதையடுத்து அவர் எம்.பி. தேர்தலில் போட்டியிட திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதற்காக, பஹரம்பூர் மக்களவைத் தொகுதியின் எம்.பி.யான முன்னாள் கிரிக்கெட் வீரர் யூசுப் பதானை ராஜினாமா செய்ய வைத்துவிட்டு, பின்னர் மம்தாவை இடைத்தேர்தலில் போட்டியிட வைக்க இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
மேலும், முன்னாள் கிரிக்கெட் வீரர் சவுரவ் கங்குலி, மம்தா பானர்ஜி சார்பாக யூசுப் பதானை தொடர்பு கொண்டு எம்.பி. பதவியை ராஜினாமா செய்ய அழுத்தம் கொடுத்ததாகவும் தகவல் வெளியானது.
இந்த தகவலுக்கு யூசுப் பதான் மறுப்பு தெரிவித்து சமூக ஊடகங்களில் ஒரு வீடியோ வெளியிட்டார். அதில் “திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் தன்னிடம் ராஜினாமா பிரச்சினை பற்றி ஒருபோதும் பேசவில்லை.
எங்களின் கடைசி சந்திப்பிலும் இந்த விவகாரம் குறித்து பேசவில்லை. அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் இல்லாத போதிலும், இது தொடர்பாக ஒரு விவாதம் நடைபெறுவது வருத்தம் அளிக்கிறது.
மேலும் சவுரவ் கங்குலி ராஜினாமா செய்ய தன்னிடம் கேட்டுக் கொள்ளவில்லை” என்று அவர் கூறினார்.
இதையடுத்து சவுரவ் கங்குலி அளித்த பேட்டியில், “வதந்திகளின் அடிப்படையில் தகவல்களை பரப்ப வேண்டாம்” என்று கேட்டுக்கொண்டார்.