ஜகதீப் தன்கர் மற்றும் மம்தா பானர்ஜி 
இந்தியா

மேற்கு வங்காள ஆளுநரை ட்விட்டரில் பிளாக் செய்த மம்தா பானர்ஜி

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மேற்கு வங்காள அரசாங்கத்தை கொத்தடிமைகளை போல ஆளுநர் நடத்துகிறார் என குற்றம்சாட்டினார்.

மாலை மலர்

கொல்கத்தா:

மேற்கு வங்காளத்தில் பல்கலைக்கழகங்களில் துணைவேந்தர் நியமனம் தொடர்பாக அம்மாநில முதலமைச்சர் மம்தா பானர்ஜி அரசுக்கும், ஆளுநர் ஜகதீப் தன்கருக்கும் இடையே கடும் பிரச்சனை நிலவி வருகிறது.

தனது ஒப்புதலின்றி மேற்கு வங்காள அரசு துணைவேந்தர்களை நியமிப்பதாக ஆளுநர் ஜகதீப் தன்கர் குற்றம்சாட்டி வருகிறார். மேலும் நேற்று மகாத்மா காந்தியின் நினைவு தின நிகழ்ச்சியின் போதும் மம்தா பானர்ஜியை ஆளுநர்  மிகக்கடுமையாக விமர்சித்து இருந்தார். 

இந்த செயல்பாடுகளால் ஆத்திரமடைந்த மம்தா பானர்ஜி, ஆளுநர் ஜகதீப் தன்கரின் ட்விட்டர் கணக்கை பிளாக் செய்துள்ளார். இதுகுறித்து மம்தா பானர்ஜி கூறியதாவது:-

நான் முன்கூட்டியே மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். ஆளுநர் ஜகதீப் தன்கர் தினமும் என்னையும், என் அதிகாரிகளையும் அவமதிப்பது போன்று ட்வீட் செய்து வருகிறார். அரசியலமைப்பு சட்டத்துக்கு விரோதமான, நெறிமுறைகளுக்கு எதிரான விஷயங்களை பேசுகிறார். 

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மேற்கு வங்காள அரசாங்கத்தை கொத்தடிமைகள் போல நடத்துகிறார். இது எனது அமைதியை குலைக்கிறது. இதனால் எரிச்சலான நான் அவரை ப்ளாக் செய்கிறேன்.

இவ்வாறு மம்தா பானர்ஜி கூறினார்.

இதையும் படியுங்கள்... கூட்டணி பேச்சுவார்த்தையில் அமைச்சரை ஒருமையில் பேசிய ஜோதிமணி எம்.பி.யால் பரபரப்பு