இந்தியா

மாலேகான் குண்டு வெடிப்பு வழக்கு: பாஜக எம்.பி. சாத்வி பிரக்யா கட்டாயம் ஆஜராக சிறப்பு நீதிமன்றம் உத்தரவு

மாலேகான் பகுதியில் உள்ள மசூதி அருகே கடந்த 2008-ம் ஆண்டு குண்டு வெடித்ததில் 6 பேர் உயிரிழந்தனர்உடல்நலக்குறைவால் நீதிமன்றத்தில் ஆஜராக முடியவில்லை என பிரக்யா தாக்கூர் தரப்பு வழக்கறிஞர் பதில் அளித்துள்ளார்

மகாராஷ்டிரா மாநிலம் நாசிக் மாவட்டத்தின் மாலேகான் பகுதியில் உள்ள மசூதி அருகே கடந்த 2008-ம் ஆண்டு செப்டம்பர் 29-ம் தேதி, இருசக்கர வாகனத்தில் வைக்கப்பட்டிருந்த குண்டு வெடித்ததில் 6 பேர் உயிரிழந்தனர். 100-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.

இந்த குண்டுவெடிப்பு தொடர்பாக பெண் சாமியார் பிரக்யா சிங் தாகூர் (தற்போதைய பாஜக எம்பி), ஓய்வுபெற்ற ராணுவ மேஜர் ரமேஷ் உபாத்யாய் உள்பட 7 பேர் கைது செய்யப்பட்டனர். மும்பையில் உள்ள என்.ஐ.ஏ., சிறப்பு நீதிமன்றத்தில், இந்த வழக்கு விசாரிக்கப்பட்டு வருகிறது.

அண்மையில், மாலேகான் குண்டு வெடிப்பு வழக்கில் தொடர்ந்து ஆஜராகாமல் இருக்கும், பாஜக எம்.பி. பிரக்யா தாக்கூருக்கு மும்பை என்.ஐ.ஏ சிறப்பு நீதிமன்றம் கண்டனம் தெரிவித்தது.

உடல்நலக்குறைவால் நீதிமன்றத்தில் ஆஜராகமுடியவில்லை என பிரக்யா தாக்கூர் தரப்பு வழக்கறிஞர் பதிலளிக்க, போபால் என்.ஐ.ஏ அதிகாரிகள் பிரக்யா தாக்கூரின் உடல்நலன் குறித்து விசாரித்து அறிக்கையை ஏப்ரல் 9-ம் தேதிக்குள் தாக்கல் செய்ய நீதிபதி உத்தரவிட்டார்.

இந்நிலையில், பாஜக எம்.பி. சாத்வி பிரக்யா, உடல்நலக் குறைவாக இருப்பதால், ஓய்வு தேவை என என்.ஐ.ஏ தாக்கல் செய்த பதிலை ஏற்காத சிறப்பு நீதிமன்றம், வரும் 22ம் தேதிக்குள் கட்டாயம் ஆஜராக வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.

உடல்நிலை காரணமாக இந்த வழக்கில் ஜாமீன் பெற்ற அவர், அடிக்கடி கிரிக்கெட் மற்றும் கூடைப்பந்து விளையாடுவதும், நடனமாடும் வீடியோக்கள் வெளியாகியது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT