இந்தியா

சட்டம்-ஒழுங்கை பாதுகாக்க மகாராஷ்டிர அரசு தவறிவிட்டது: எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு

சைஃப் அலி கான் தாக்கப்பட்ட சம்பவம் கவலை அளிக்கிறது. இந்தி நடிகை பூஜாபட், ஜூனியர் என்.டி.ஆர். உள்ளிட்டோர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

மும்பை:

நடிகர் சைஃப் அலி கான் கத்தியால் குத்தப்பட்டதற்கு இந்தி திரையுலகம் மற்றும் எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்துள்ளன.

காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் அதுல் லோண்டே கூறியதாவது:-

மகாராஷ்டிர பா.ஜ.க. அரசு சட்டம்-ஒழுங்கை பாதுகாக்க தவறிவிட்டது. பிரபல நடிகர்களுக்கே பாதுகாப்பு இல்லாத நிலை ஏற்பட்டு விட்டது. பிரபலங்கள் வீடுகளில் குண்டு துளைக்காத ஜன்னல்கள் இருக்கும். அவர்களுக்கே இந்த நிலை என்றால் சாதாரண மக்களின் நிலை என்னவாகும்.

இதுபோன்ற சம்பவங்களால் மாநிலத்தின் முதலீடுகள் பாதிக்கும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

தேசியவாத காங்கிரஸ் எம்.பி. சுப்ரியா சுலே கூறியதாவது:-

சைஃப் அலி கான் தாக்கப்பட்ட சம்பவம் கவலை அளிக்கிறது. அவர் ஆஸ்பத்திரியில் நலமாக இருக்கிறார். இந்த சம்பவம் மும்பையில் பாதுகாப்பற்ற சூழலை ஏற்படுத்தி உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

பா.ஜ.க. செய்தி தொடர்பாளர் ராம்கதம் கூறும்போது, 'சைஃப் அலி கானை தாக்கிய குற்றவாளி விரைவில் பிடிபடுவான். போலீசார் இதற்கான முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்' என்றார்.

இந்தி நடிகை பூஜாபட், ஜூனியர் என்.டி.ஆர். உள்ளிட்டோர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் அதிர்ச்சி அளிப்பதாகவும், பயமாகவும் உள்ளது என்று பூஜா பட் தெரிவித்துள்ளார்.