India Seeks Return of Vagdevi Idol from British Museum 
இந்தியா

இங்கிலாந்தில் உள்ள வாக்தேவி அம்மன் சிலையை மீட்க மத்தியப்பிரதேசம் கோரிக்கை!

இந்த கோரிக்கைகள் பிரிக்ஸ் மாநாட்டில் கலந்து ஆலோசிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மத்தியப்பிரதேசத்தின் தார் மாவட்டத்தில் இருந்து வாக்தேவி சிலை இங்கிலாந்திற்கு கொண்டு செல்லப்பட்டு ஒர் நூற்றாண்டை கடந்துள்ள நிலையில், அதனை திரும்ப கொண்டு வரவேண்டும் என்ற கோரிக்கை தற்போது முக்கியத்துவம் பெற்றுள்ளது.

போபாலில் நடைபெற்று வரும் பிரிக்ஸ் கலாச்சார பணிக்குழு மற்றும் கலாச்சார அமைச்சர்கள் கூட்டங்களில், காலனித்துவ காலத்தில் திருடப்பட்டு இங்கிலாந்திற்கு கொண்டு செல்லப்பட்ட சிலையை தாயகம் திரும்ப கொண்டு வருவதற்கு ஆலோசிக்கப்பட்டு வருகிறது.

மேலும் பிரிக்ஸ் நடுகளிடையே ஒரு வலுவான ஒத்துழைப்பை வலியுறுத்துவதற்காக, இந்தியா இந்த நான்கு நாட்கள் நடைபெறும் கலந்தாய்வுகளை பயன்படுத்தி கொள்ளும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மத்திய கலாச்சார அமைச்சகம்

இதுகுறித்து மத்திய கலாச்சார அமைச்சகத்தில் செயலாளராக உள்ள விவேக் அகர்வால் கூறுகையில், “மத்திய கலாச்சார அமச்சகத்தில் நான் செயலாளராக பொறுப்பேற்ற உடனேயே, பிரிட்டிஷ் அருங்காட்சியகத்தில் உள்ள வாக்தேவி அம்மன் சிலையை திருப்பி அனுப்பக்கோரி, மத்தியப் பிரதேச அரசு எங்களுக்கு கடிதம் எழுதியது.

அன்று முதல், நாங்கள் தூதரக வழிமுறைகள் மூலமாகவும், அருங்காட்சியக மட்டத்திலும் தொடர்ந்து பணியாற்றி வருகிறோம்” என்று கூறினார்.

உயர் நீதிமன்றம் தீர்ப்பு

கடந்த மே மாதம், போஜசாலா-கமல் மௌலா மசூதி வளாகம் சரஸ்வதி தேவிக்கு அர்ப்பணிக்கப்பட்ட ஒரு கோயில் என்று மத்தியப்பிரதேச உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. அந்த இடத்தில் பல நூற்றாண்டுகளாக இந்து வழிபாடு தொடர்ந்து நடைபெற்று வருவதாகக் கூறிய நீதிமன்றம், பிரத்தியேக இந்து வழிபாட்டு உரிமைகளுக்கான கோரிக்கையை ஏற்றுக்கொண்டது.

மேலும், அந்த வளாகத்தில் இஸ்லாமியர்கள் வெள்ளிக்கிழமை தொழுகை நடத்த அனுமதி அளித்திருந்த இந்திய தொல்லியல் துறையின் 2003 ஏப்ரல் 7 ஆம் தேதியிட்ட உத்தரவையும் அது ரத்து செய்தது.

நீதிமன்றம் தனது தீர்ப்பை வழங்குவதற்கு முன்னர், தொல்லியல் மற்றும் வரலாற்றுப் பதிவுகள், இந்திய தொல்லியல் துறையின் (ASI) அறிவிப்புகள், அதன் அறிவியல் ஆய்வின் கண்டுபிடிப்புகள் மற்றும் தொடர்புடைய சட்ட விதிகளை ஆய்வு செய்தது.

வாக்தேவி சிலை

பரமாரா காலத்தை சேர்ந்த இந்த வெள்ளை பளிங்கு சிற்பம், 11ஆம் நூற்றாண்டில் தார் நகரை இணைக்கும் ஒரு கல்வெட்டை கொண்டுள்ளது.

இது சுமார் 1.28 மீட்டர் உயரமும், 250 கிலோகிராம் எடையும் கொண்டதாக அறியப்படுகிறது. மேஜர் ஜெனரல் வில்லியம் கின்கெயிட் என்பவரிடம் இருந்து இது பெறப்பட்டதாகவும், 1909ஆம் ஆண்டில் இது முறையாக தனது சேகரிப்பில் சேர்க்கப்பட்டதாகவும் அருங்காட்சியகம் பதிவு செய்துள்ளது.

மீட்கப்பட்ட தொல்பொருட்கள்

சமீபத்தில் பிரதமர் நரேந்திர மோடி ஆஸ்திரேலியா சென்ற போது, தமிழகத்தை சேர்ந்த ஒரு கல் நந்தி, பத்ரகாளி உருவம் பொறிக்கப்பட்ட உலோக திரிசூலம் மற்றும் ஆறு தலை கொண்ட கல் கார்த்திக்கேயன் ஆகிய மூன்று தொல்பொருட்களை ஆஸ்திரேலியா தாமாக முன்வந்து திரும்ப தருவதற்கு ஒப்புக்கொண்டது குறிப்பிடத்தக்கது.