மத்திய பிரதேசத்தின் பார்கி அணையில் கடந்த 30-ந்தேதி சுற்றுலா படகு மூழ்கி தமிழகத்தை சேர்ந்தவர்கள் உள்பட 11 பேர் பலியாகி உள்ளனர். மேலும் 2 பேரை தேடும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.
நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய இந்த படகு விபத்துக்கான காரணங்களை மாநில சுற்றுலாத்துறை மந்திரி தர்மேந்திர சிங் லோதி கூறுகையில், 'விபத்துக்குள்ளான படகு 2006-ம் ஆண்டு மாடலை சேர்ந்தது. அது மூழ்காத வகையில் தயாரிக்கப்பட்டது. எனவே மூழ்குவதற்கான சாத்தியம் மிகக்குறைவு. ஆனால் சம்பவம் நடந்த நாளில் ஏற்பட்ட சக்திவாய்ந்த புயலின் காரணமாக அலைகள் உயரமாக எழுந்ததால் இந்த துயரச் சம்பவம் நிகழ்ந்தது' என தெரிவித்தார்.
மேலும் அவர் கூறும்போது. 'விபத்து தொடர்பாக அமைக்கப்பட்டு உள்ள விசாரணைக் குழு ஒரு மாதத்துக்குள் தனது அறிக்கையைச் சமர்ப்பிக்கும். அதில் படகின் தகுதிச் சோதனை செய்யப்படவில்லை எனில், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்' என்று கூறினார்.