இந்தியா

அதிகாரிகளுக்கு சொந்தமான இடங்களில் லோக்ஆயுக்தா சோதனை: ரூ.50 கோடி மதிப்புள்ள சொத்துக்கள் பறிமுதல்

உயர்கல்வித்துறை துணை செயலாளர், அவரது உறவினர்கள் வீடுகளில் மொத்தம் ரூ. 22.15 லட்சம் ரொக்கம்பறிமுதல் செய்யப்பட்டது. சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு சம்மன் அனுப்பி விசாரணை நடத்த லோக்ஆயுக்தா போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

பெங்களூரு:

கர்நாடகாவில் அவ்வப்போது லோக்ஆயுக்தா போலீசார் வருமானத்துக்கு அதிகமான சொத்துக்கள் வாங்கி குவித்த அதிகாரிகள் வீடுகளில் அதிரடி சோதனை நடத்தி நகை, பணம் மற்றும் சொத்து ஆவணங்களை பறிமுதல் செய்து வருகின்றனர்.

அதே போல் நேற்றும் பல்வேறு துறைகளை சேர்ந்த 10 அதிகாரிகளுக்கு சொந்தமான வீடுகள், மற்றும் அவர்களது உறவினர்கள் வீடுகள், பினாமிகள் என சந்தேகிக்கப்படும் நபர்களின் வீடுகள் என 50 இடங்களில் அதிரடி சோதனை நடத்தினர்.

இதில் உயர்கல்வித்துறை துணை செயலாளர் அகேஷ்பாபு மற்றும் அவரது உறவினர்கள் வீடுகளில் மொத்தம் ரூ. 22.15 லட்சம் ரொக்கம் மற்றும் பணம் எண்ணும் எந்திரம் பறிமுதல் செய்யப்பட்டது.

பெங்களூரு ஊரக மாவட்ட சுகாதார அலுவலர் டாக்டர் சுனில்குமார் என்பவரது வீட்டில் இருந்து சொகுசு ஹோம் தியேட்டர் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

இதே போல் பல்வேறு இடங்களில் இருந்தும் வருமானத்துக்கு அதிகமாக வாங்கி குவித்த ரூ. 50 கோடி மதிப்புள்ள தங்க நகை மற்றும் பணம், சொத்து ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இதையடுத்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு சம்மன் அனுப்பி விசாரணை நடத்த லோக்ஆயுக்தா போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

SCROLL FOR NEXT