திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் பெண் எம்.பி.யான மஹுவா மொய்த்ரா, பாராளுமன்றத்தில் கேள்வி கேட்பதற்காக தொழில் அதிபர் தர்ஷன் ஹிராநந்தனிடம் பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் பெற்றதாக, பா.ஜனதா எம்.பி. நிஷிகாந்த் டுபே மற்றும் வழக்கறிஞர் ஜெய் ஆனந்த் தொகாத்ராய் ஆகியோர் குற்றம்சாட்டியிருந்தனர். மத்திய அரசியலில் இது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதுதொடர்பாக குற்றம்சாட்டிய இருவரிடம் பாராளுமன்ற நெறிமுறைக்குழு விசாரணை நடத்தும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
அதன்படி மக்களவை நெறிமுறைக்குழு இன்று விசாரணையை தொடங்குகிறது. குற்றம்சாட்டிய பா.ஜனதா எம்.பி. நிஷிகாந்த் டுபே மற்றும் வழக்கறிஞர் ஜெய் ஆனந்த் தொகாத்ராய் ஆகியோர், இன்று பாராளுமன்ற மக்களவை நெறிமுறைக்குழு முன் ஆஜராக இருக்கின்றனர்.
கடந்த ஒரு வாரத்திற்கு மேலாக இந்த விவாகரம் பரபரப்பாக பேசப்பட்டு வரும் நிலையில், தற்போது முதன்முறையாக விசாரணை தொடங்கப்படுகிறது.