இந்தியா

பிரியாணியால் தற்கொலை முடிவை கைவிட்ட வியாபாரி... கொல்கத்தாவில் ருசிகர சம்பவம்

மகளை ரோட்டில் நிற்க வைத்துவிட்டு மேம்பாலத்தின் மீது ஏறி நின்று குதிக்க முயன்றார்.நீண்ட நேரம் பேச்சுவார்த்தை நடத்தியும் டைல்ஸ் வியாபாரி தற்கொலை முடிவை கைவிடவில்லை.

கொல்கத்தா:

மேற்குவங்க மாநிலம் கொல்கத்தாவைச் சேர்ந்த 45 வயது டைல்ஸ் வியாபாரி. இவருக்கு தொழிலில் நஷ்டம் ஏற்பட்டது.

இதனால் ஏற்பட்ட குடும்பத் தகராறில் மனைவி அவரை பிரிந்து சென்று விட்டார். அவரது 2-வது மகளும் மனைவியுடன் சென்றுவிட்டார். இதனால் டைல்ஸ் வியாபாரி தனது மூத்த மகளுடன் வசித்து வந்தார்.

மனைவி பிரிந்து சென்றதால் விரக்தி அடைந்த டைல்ஸ் வியாபாரி தற்கொலை செய்ய முடிவு செய்தார். நேற்று தனது மூத்த மகளை பைக்கில் அழைத்துக் கொண்டு கொல்கத்தா சயின்ஸ் சிட்டிக்கு சென்றார்.

அங்குள்ள மேம்பாலத்தில் பைக்கை நிறுத்தினார். மகளை ரோட்டில் நிற்க வைத்துவிட்டு மேம்பாலத்தின் மீது ஏறி நின்று குதிக்க முயன்றார். அதனை கண்ட வாகன ஓட்டிகள் அதிர்ச்சி அடைந்தனர். கூச்சலிட்டு அவரை தடுத்து நிறுத்தினர். ஆனாலும் அவர் மேம்பாலத்தில் இருந்து இறங்கவில்லை.

போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். மேம்பாலத்தின் நுனியில் நின்று கொண்டிருந்த வியாபாரியிடம் தயவு செய்து கீழே இறங்குங்கள்.

உங்கள் மகளின் வாழ்க்கையை நினைத்துப் பாருங்கள் என பேச்சுவார்த்தை நடத்தினர்.

நீண்ட நேரம் பேச்சுவார்த்தை நடத்தியும் டைல்ஸ் வியாபாரி தற்கொலை முடிவை கைவிடவில்லை. தொடர்ந்து பாலத்தில் நின்று கொண்டே இருந்தார்.

மேலும் அங்கிருந்த பொதுமக்களும் சத்தம் போட்டபடி அவரை தயவு செய்து குதிக்க வேண்டாம் என தெரிவித்தனர் .

அந்நேரத்தில் தான் போலீசாருக்கு ஒரு யோசனை வந்தது. கொல்கத்தா சயின்ஸ் சிட்டி நகரில் பிரபல ஓட்டல் ஒன்றில் ருசியான பிரியாணி விற்பனை செய்யப்படுகிறது.

அது பற்றி டைல்ஸ் வியாபாரியிடம் கூறினர். தற்கொலை முடிவை கைவிட்டால் பிரபல ஓட்டலில் இருந்து பிரியாணி  வாங்கி தருகிறோம் என தெரிவித்தனர்.

இதனை கேட்டதும் வியாபாரி தற்கொலை செய்யும் முடிவை கைவிட்டு கீழே இறங்கினார். உடனடியாக அவருக்கு பிரியாணி வாங்கிக் கொடுத்தனர்.

அதனை சாப்பிட்டுவிட்டு வீட்டிற்கு திரும்பிச் சென்றார். இதனால் போலீசார் நிம்மதி பெருமூச்சு விட்டனர்.

இந்த சம்பவத்தால் சயின்ஸ்சிட்டி மேம்பாலத்தில் 20 நிமிடங்கள் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

மேலும் இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.