திருவனந்தபுரம்:
கேரள மாநிலத்தை சேர்ந்த 49 வயதான பெண் ஒருவர் டெல்லி கோர்ட்டில் ஒரு மனு தாக்கல் செய்தார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-
டெல்லியை சேர்ந்த ஆண் நண்பர் ஒருவருக்கு அபூர்வ நோய் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்த நோய் பாதிப்பால் அவருக்கு நரம்பு அழற்சி ஏற்பட்டு படுத்த படுக்கையாக உள்ளார்.
அவருடைய வேலைகளை கூட அவரால் செய்ய முடியவில்லை. 2014-ம் ஆண்டு முதல் அவர் இந்த நோயால் அவதிப்பட்டு வருகிறார்.
இந்த நிலையில் அவர் ஐரோப்பிய நாட்டுக்கு சென்று அங்கு கருணை கொலையில் ஈடுபட திட்டமிட்டுள்ளார். இதற்காக அவர் சிகிச்சைக்கு செல்வதாக கூறி விசாவுக்கு விண்ணப்பித்து உள்ளார்.
அவ்வாறு அவர் வெளிநாடு சென்றால் அவரது குடும்பத்தினர் பெரும் பாதிப்புக்கு ஆளாவார்கள். எனவே அவருக்கு வெளிநாடு செல்ல விசா வழங்ககூடாது. மேலும் அவரது உடல் நிலையை பரிசோதித்து சிகிச்சை அளிக்க ஒரு குழுவை நியமிக்க மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு அந்த மனுவில் கூறியுள்ளார்.
ஆண் நண்பருக்காக பெண் ஒருவர் கோர்ட்டில் தொடர்ந்துள்ள இந்த மனு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.