கேரளத்தில் மழை, நிலச்சரிவால் இதுவரை 9 பேர் இறந்துள்ளதாக முதலமைச்சர் வி.டி.சதீசன் தெரிவித்துள்ளார்.
கேரளத்தில் கடந்த 3 நாட்களாக கனமழை பெய்து வருகிறது. பத்தனம்திட்டா, கோட்டயம், இடுக்கி மாவட்டங்களில் பல இடங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு பாதிப்பை சந்தித்துள்ளது. பூஞ்ஞார், அடூர் மலை போன்ற மலையோர பகுதிகளில் நிலச்சரிவு ஏற்பட்டு உயிரிழப்பும் நிகழ்ந்துள்ளது.
பம்பை ஆற்றில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கால் பத்தனம்திட்டா, ஆலப்புழை போன்ற மாவட்டங்களில் பல பகுதிகள் வெள்ளத்தால் சூழப்பட்டு, வடியாமல் இருக்கிறது. இது அங்குள்ள மக்களை வெகுவாக பாதித்துள்ளது.
மேலும் மழை பாதிப்பு தொடர்பாக கேரளம் முதலமைச்சர் வி.டி.சதீசன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
கேரளத்தில் ஏற்பட்ட நிலச்சரிவு மற்றும் மழை வெள்ளத்திற்கு இதுவரை 9 பேர் மரணம் அடைந்துள்ளனர். 13 பேர் காயங்களுடன் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
8 பேர் மாயமாகி உள்ளனர். அவர்களை தேடும் பணி நடந்து வருகிறது. மாநிலத்தில் இதுவரை 27 வீடுகள் முற்றிலுமாகவும், 196 வீடுகள் சிறிய அளவிலும் சேதம் அடைந்துள்ளன. மழையால் பாதிக்கப்பட்ட 5,792 பேர் 209 நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இதற்கிடையே கடலில் மீன்பிடிக்க சென்றபோது படகு கவிழ்ந்து மாயமான மீனவர் ஒருவர் பிணமாக மீட்கப்பட்டார். அதாவது திருவனந்தபுரம் அருகே உள்ள முதலப்பொழி முகத்துவாரப் பகுதியில் இருந்து நேற்று முன்தினம் 4 மீனவர்கள் ஒரு படகில் கடலில் மீன்பிடிக்க சென்றனர்.
அப்போது ராட்சத அலையில் சிக்கி படகு கவிழ்ந்தது. இதில் படகில் இருந்த 4 மீனவர்களும் கடலில் தூக்கி வீசப்பட்டனர். அவர்களில் ஜோஸ், ஸ்மித் ஆகிய 2 மீனவர்கள் நீந்தி கரை சேர்ந்தனர். பிரீமன் (வயது 28), ஷிஜின் (32) ஆகியோர் மாயமானார்கள். இதில் நேற்று பிரீமன் பிணமாக மீட்கப்பட்டார். மாயமான ஷிஜினை தொடர்ந்து தேடி வரும் பணி நடக்கிறது.
இந்தநிலையில் நேற்று முன்தினம் விழிஞ்ஞம் பகுதியில் கடல் சீற்றம் காரணமாக மீன்பிடி படகு கவிழ்ந்தது. இதில், மாயமான புல்லுவிளையைச் சேர்ந்த ஜான் (54), கொட்டுக்காலைச் சேர்ந்த ஆண்டனி (63) ஆகியோரையும் விழிஞ்ஞம் கடலோர காவல் குழும போலீசார் தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
அந்த இருவரும் கடலில் மூழ்கி இறந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது.