தலைக்கீழாக ஏற்றப்பட்ட கொடி 
இந்தியா

தேசிய கொடியை தலைகீழாக ஏற்றிய கேரளா மந்திரி- விசாரணை நடத்த அவரே உத்தரவு

மந்திரி பதவி விலக வேண்டும் என பா.ஜ.க.வினர் வலியுறுத்தி வருகின்றனர்.

மாலை மலர்

பாலக்காடு:

நாடு முழுவதும் நேற்று 73-வது குடியரசு தின விழா கொண்டாடப்பட்டது. இதையொட்டி ஒவ்வொரு மாநிலத்திலும் உள்ள மந்திரிகள், அரசியல் தலைவர்கள் அரசு அலுவலகங்களில் கொடியேற்றி மரியாதை செலுத்தினர்.

இந்நிலையில் கேரள மாநிலம் காசர்கோடு மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்ற குடியரசு தின விழாவில், கேரள துறைமுகங்கள், தொல்பொருள் மற்றும் அருங்காட்சியகத்துறை மந்திரி அகமது தேவர்கோவில் தேசியக்கொடி ஏற்றி மரியாதை செலுத்தினார். 

அப்போது அவர் ஏற்றிய தேசியக்கொடி தலைகீழாக இருந்தது. இதனால் அந்த இடத்தில் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் அவர், தேசியக்கொடியை உடனே கீழே இறக்கி, சரி செய்து, மீண்டும் நேராக ஏற்றினார். அதை தொடர்ந்து அங்கு நடைபெற்ற போலீசாரின் அணிவகுப்பு மரியாதையையும் ஏற்று கொண்டார். 

இந்த சம்பவம் தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ஒரு மாநிலத்தின் மந்திரியே தேசிய கொடியை தலைக்கீழாக ஏற்றலாமா என காங்கிரஸ் கட்சியினர் கடும் கண்டனத்தை தெரிவித்தனர். அவர் பதவி விலக வேண்டும் என அம்மாநில பா.ஜ.க.வினர் வலியுறுத்தி வருகின்றனர்.

இதையொட்டி தேசியக்கொடியை தலைகீழாக கட்டியது யார் என்று விசாரணை நடத்த மாவட்ட நீதிபதி மற்றும் போலீஸ் சூப்பிரண்டுக்கு மந்திரி அகமது தேவர்கோவில் உத்தரவிட்டு உள்ளார். 

இளம்பெண்களுடன் ‘டேட்டிங்’ செய்ய முயன்று ரூ.88 ஆயிரத்தை இழந்த என்ஜினீயர்