கொச்சி:
இந்தியா முழுவதும் கொரோனா தடுப்பூசி செலுத்தியவர்களுக்கு வழங்கப்பட்டு வரும் சான்றிதழ்களில் பிரதமர் மோடியின் புகைப்படம் இடம்பெற்றுள்ளது. அந்த படத்தை நீக்க வேண்டும் என கேரளா உயர்நீதிமன்றத்தில் பீட்டர் மயலிபரம்பில் என்பவர் வழக்கு தொடர்ந்தார். இந்நிலையில் அந்த வழக்கை நீதிமன்றம் ரத்து செய்துள்ளது. மேலும் அவ்வழக்கை தொடர்ந்த பீட்டர் மயலிபரம்பிலிற்கு ரூ.1 லட்சம் அபராதம் விதித்தும் உத்தரவிட்டுள்ளது.
இந்த வழக்கு தொடர்பாக கேரள உயர்நீதிமன்ற நீதிபதி பிவி குன்னி கிருஷ்ணன் கூறியது: -
கொரோனா தடுப்பூசி சான்றிதழ்களில் இருந்து பிரதமர் மோடியின் புகைப்படத்தை நீக்க வேண்டும் என்ற இந்த வழக்கு அரசியல், விளம்பர நோக்கத்திற்காக அற்பமான முறையில் தொடரப்பட்டுள்ளது. நீதிமன்ற நேரத்தை வீணாக்கியதற்காக மனுதாரர் பீட்டர் மயலிபரம்பில் 6 வாரத்திற்குள் ரூ. 1 லட்சம் அபராதம் செலுத்த வேண்டும். அவ்வாறு செலுத்த தவறும் பட்சத்தில் வருவாய் மீட்பு நடவடிக்கைகள் மூலம் அவரது சொத்துக்களில் இருந்து அபராதத்தை வசூலித்துக்கொள்ளலாம். இந்த நாட்டின் குடிமகன் ஒருவரிடம் இருந்து இதுபோன்ற ஒரு மனுவை நாங்கள் எதிர்பார்க்கவில்லை. ஆயிரக்கணக்கில் குற்ற வழக்குகள், சிவில் வழக்குகள் நிலுவையில் இருக்கும்போது இந்த வழக்கு நீதிமன்றத்தின் பொன்னான நேரத்தை வீணடித்துள்ளது.
இவ்வாறு நீதிபதி பிவி குன்னி கிருஷ்ணன் கூறினார்.