பெங்களூர்:
கர்நாடக காவல்துறையில் உயர் பதவிகளுக்கு 8 திருநங்கைகளை பணி அமர்ந்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இதன்படி சிறப்பு ரிசர்வ் துணை காவல் ஆய்வாளர்கள், குற்றக்காட்சி அதிகாரிகள் பதவிகளில் திருநங்கைகள் பணி அமர்த்தப்படவுள்ளனர்.
இதுகுறித்து கூடுதல் இயக்குநர் ஜெனரல் கூறியதாவது:
கர்நாடக காவல்துறையில் சிறப்பு ரிசர்வ் துணை காவல் ஆய்வாளர்களுக்கான 70 பணியிடங்களில் 5 பணியிடங்கள் திருநங்கைகளுக்காக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இவற்றில் கர்நாடக மாநில ரிசர்வ் காவல்துறையில் சிறப்பு ரிசர்வ் துணை காவல் ஆய்வாளர் பதவிக்கு 4 திருநங்கைகளும், இந்திய ரிசர்வ் பட்டாலியன் பிரிவில் திருநங்கைகளுக்கு ஒரு துணை காவல் ஆய்வாளர் பதவியும் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த பணிக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் ஆன்லைன் மூலம் ஜனவரி 18-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.
அதேபோன்று தடயவியல் ஆய்வகத்தில் உள்ள 206 குற்றக்காட்சி அதிகாரிகள் பணியிடங்களில், 3 பணியிடங்கள் திருநங்கைகளுக்காக ஒதுக்கப்பட்டுள்ளன. இந்த பணியிடங்களுக்கும் ஜனவரி 15 வரை விண்ணப்பிக்கலாம்.
இவ்வாறு கூடுதல் இயக்குநர் ஜெனரல் கூறினார்.