பாம்பை கண்டால் படையும் நடுங்கும் என கூறுவார்கள். ஆனால் 12 அடி நீள மலைப்பாம்பை 10 வயது சிறுவன் துணிச்சலாக பிடித்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
கர்நாடகா மாநிலம் குந்தபுரா பகுதியில் சாலையோரம் புதருக்குள் ராட்சத மலைப்பாம்பு ஒன்றை முதியவர் ஒருவர் கண்டுள்ளார். உடனே அவர் அந்த பாம்பை பிடித்து இழுத்த போது மலைப்பாம்பு வெளியே வர மறுத்தது. இதை அப்பகுதியை சேர்ந்தவர்கள் வேடிக்கை பார்த்து கொண்டு இருந்தனர். ஆனால் அப்பகுதியை சேர்ந்த 10 வயது சிறுவன் துணிச்சலுடன் புதருக்குள் சென்று வெறும் கையால், அந்த மலைப்பாம்பின் தலையை பிடித்து வெளியே தூக்கி வந்தான்.
அப்போது அந்த பாம்பு அவனது கையை சுற்றிய நிலையிலும் வலியை பொறுப்படுத்தாமல் பாம்பை புதருக்குள் வெளியே சிறுவன் கொண்டு வந்த காட்சிகள் இணைய பயனர்களை ஆச்சரியப்பட வைத்துள்ளது. பின்னர் பொதுமக்களில் ஒருவர் சாக்குப்பையை கொண்டு வரவும் சிறுவன் அந்த பாம்பை பைக்குள் போடுகிறான்.
இந்த வீடியோவை கர்நாடகாவை சேர்ந்த பிரபல டாக்டர் துர்கா பிரசாத் ஹெக்டே என்பவர் தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டார். வீடியோ வைரலான நிலையில் நெட்டிசன்கள் பலரும் சிறுவனின் துணிச்சலை பாராட்டி வருகின்றனர்.