பெங்களூரு:
கோவாவை போல் கர்நாடகாவுக்கும் சுற்றுலா பயணிகள் வருகையை அதிகரிக்கும் நோக்கில் சுற்றுலாத் துறை பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
அதன் ஒரு பகுதியாக கர்நாடக கடற்கரைகளிலும் மது விற்பனையை அனுமதிக்க கர்நாடக அரசு திட்டமிடப்பட்டுள்ளது. இது குறித்து கர்நாடக சுற்றுலாத் துறை சார்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
சுற்றுலாப் பயணிகளை கவர மாற்றங்கள் அவசியம். கர்நாடக கடற்கரைகளில் பொதுமக்கள் இரவு நேரங்களில் அதிக நேரம் செலவிடும் வகையில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.
இரவு நேரங்களில் பொதுமக்களுக்கு பாதுகாப்பு அளிக்கவும். இரவு நேரங்களில் அதிகமான மின் விளக்குகள் பொருத்தவும் சுற்றுலாத்துறை திட்டமிட்டுள்ளது.
மேலும் கடற்கரை அருகில் டென்ட் அமைக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்காக அரசு மற்றும் தனியார் இடங்களை தேர்வு செய்யும் படி அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் சுற்றுலாவை ஊக்கப்படுத்தும் நோக்கில் கடற்கரைகளில் மது குடிக்கவும், விற்பனைக்கும் அனுமதி அளிக்கும்படி வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. இது குறித்தும் அரசு ஆலோசித்து வருகிறது. இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஏற்கனவே மங்களூரு நகரில் உணவகம் மற்றும் உரிமம் பெற்ற வணிக நிறுவனங்கள் நள்ளிரவு 1 மணி வரைசெயல்பட அனுமதி வழங்கப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.
எனவே கோவா மாநிலத்தை போல் சுற்றுலாப் பயணிகள் வருகையை அதிகரிக்க விரைவில் கர்நாடக கடற்கரைகளிலும் மது விற்பனையை அனுமதிக்க அரசு நடவடிக்கை எடுத்து வருவதாக தகவல் வெளியாகி இருக்கிறது.