இந்தியா

கர்நாடகாவில் கோர விபத்து: கார்-பஸ் மோதி தீப்பிடித்து 6 பேர் உடல் கருகி பலி

போலீசார் வழக்கு பதிவு செய்து பலியானவர்கள் யார்? என்று அடையாளம் காண முயற்சித்து வருகின்றனர்.

கர்நாடகாவின் யாத்கிரியில் இருந்து ராய்ச்சூரை நோக்கி ஒரு கார் சென்று கொண்டிருந்தது. காரில் 8 பேர் இருந்தனர். கார் இன்று காலை சுர்பூர் தாலுகாவில் உள்ள தேவாபூர் அருகே வந்தபோது எதிரே பெங்களூருவில் இருந்து கலபுரகி நோக்கிச் சென்று கொண்டிருந்த ஒரு தனியார் பேருந்து மீது மோதியது.

இந்த மோதலால் கார் தீப்பற்றி எரிந்தது. பஸ்சிலும் தீ பிடித்தது. உடனடியாக தீயணைப்பு பணியாளர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீயை அணைத்தனர்.

இந்த கோர விபத்தில் காரில் வந்த 6 பேர் உடல் கருகி சம்பவ இடத்திலேயே பலியானார்கள். 2 பேர் பலத்த காயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அவர்களில் ஒருவர் கவலைக்கிடமான நிலையில் இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. போலீசார் வழக்கு பதிவு செய்து பலியானவர்கள் யார்? என்று அடையாளம் காண முயற்சித்து வருகின்றனர். மேலும் விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் விசாரித்து வருகிறார்கள்.