பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட கர்நாடக முதலமைச்சர் டி.கே.சிவகுமாரின் அமைச்சரவை விரிவாக்கம் இன்று நடைபெற உள்ளது. இதனைத் தொடர்ந்து, அமைச்சர் வேட்பாளர்களின் இறுதிப் பட்டியலுக்கு காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே அதிகாரப்பூர்வ ஒப்புதல் அளித்துள்ளார். மேலும், மாநில சட்டமன்றத்தின் அடுத்த சபாநாயகராக ஜி.எஸ்.பாட்டீலின் பெயரையும் கட்சித் தலைமை அங்கீகரித்துள்ளது.
இந்தப் பட்டியலில், ஜமீர் அகமது கான் மற்றும் சந்தோஷ் லாட் போன்ற சில தற்போதைய அமைச்சர்களின் பெயர்கள் உட்பட 20 பெயர்கள் உள்ளன. கார்கே மற்றும் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி ஆகியோருக்கு இடையேயான சந்திப்பைத் தொடர்ந்து, இது முதலமைச்சர் சிவகுமாரிடம் பகிரப்பட்டது. நெறிமுறையின்படி, அமைச்சர் பதவிக்கு போட்டியிடுபவர்களுக்குப் பதவிப் பிரமாணம் செய்து வைப்பதற்கு முன்பு, முதலமைச்சர் இந்தப் பட்டியலை ஆளுநர் தாவர் சந்த் கெலாட்டிடம் பகிர வேண்டும்
இதில், பட்கல் சட்டமன்ற உறுப்பினர் மங்கல் வைத்யாவின் பெயர் இடம்பெற்றிருந்த நிலையில், சுமார் ஒரு மணி நேரத்திற்குப் பிறகு காங்கிரஸ் கட்சி அவரது பெயரை நீக்கிவிட்டு, அவருக்குப் பதிலாக எஸ்.எஸ். மல்லிகார்ஜுனின் பெயரைச் சேர்த்தது. இந்தச் சம்பவத்திற்குக் காரணம் தட்டச்சுப் பிழை என்று காங்கிரஸ் கட்சி கூறியுள்ளது.
மேலும், ஜி.எஸ்.பாட்டீல் சட்டமன்றத்தின் புதிய சபாநாயகராக நியமிக்கப்படுவார். இந்தப் பதவியை முன்னதாக வகித்த யூ.டி. காதர், கடந்த ஜூன் மாதம் சிவகுமார் அமைச்சரவையில் சுகாதார அமைச்சராகப் பொறுப்பேற்றார். அமைச்சர் வேட்பாளர்களுக்கான பதவியேற்பு விழா மாலை 4.05 மணிக்கு நடைபெற உள்ளது. முன்னதாக, பட்டியலை இறுதி செய்யும் போது காங்கிரஸ் தலைமை சாதி, மதம் மற்றும் பிராந்திய சமன்பாடுகளை கவனமாக மதிப்பீடு செய்து வருவதாக பிடிஐ செய்தி நிறுவனம் தெரிவித்திருந்தது.
பல்வேறு சமூகக் குழுக்கள் மற்றும் பிராந்தியங்களிடையே சமநிலையை ஏற்படுத்த கட்சித் தலைமை முயற்சி செய்து வருவதாக, அந்த செய்தி நிறுவனம் மேற்கோள் காட்டிய வட்டாரங்கள் தெரிவித்திருந்தன. நிலுவையில் இருந்த அமைச்சரவை விரிவாக்கம் முன்னதாக ஜூலை 31, வெள்ளிக்கிழமை அன்று நடைபெறும் என எதிர்பார்க்கப்பட்டது, ஆனால் டெல்லியில் கட்சித் தலைமை நடத்திய பேச்சுவார்த்தைகளைத் தொடர்ந்து அந்தத் திட்டம் ஒத்திவைக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.
ஜூன் 3-ஆம் தேதி சிவகுமார் முதலமைச்சராகப் பதவியேற்ற பிறகு, இது பல வாரங்களாக விவாதத்தில் இருந்து வருகிறது. தற்போது, கர்நாடகாவில் அதிகபட்சமாக அனுமதிக்கப்பட்ட 34 அமைச்சர்களுக்கு எதிராக, முதலமைச்சர் உட்பட 14 அமைச்சர்களே உள்ளனர். இதனால், அமைச்சரவையில் 20 இடங்கள் காலியாக உள்ளன.
கார்கே, காந்தி மற்றும் முதல்வர் சிவகுமார் ஆகியோரைத் தவிர, முன்னாள் முதல்வர் சித்தராமையா, காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி. வேணுகோபால், கர்நாடகப் பொறுப்பு ஏ.ஐ.சி. பொதுச் செயலாளர் ரந்தீப் சிங் சுர்ஜேவாலா மற்றும் காங்கிரஸ் கர்நாடகத் தலைவர் பி.கே. ஹரிபிரசாத் ஆகியோரும் அமைச்சரவை விரிவாக்கத்திற்கான ஆலோசனைகளில் ஈடுபட்டிருந்ததாக தகவல்கள் வெளியானது குறிப்பிடத்தக்கது.