இந்தியா

கேரளாவில் சோகம்: மயக்க மருந்து செலுத்தப்பட்ட ஒன்றரை வயது குழந்தை உயிரிழப்பு

குழந்தையின் உறவினர்கள் அளித்த புகாரின்பேரில், பேபி மெமோரியல் மருத்துவமனை மருத்துவர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

கேரளாவில் உள்ள தனியார் மருத்துவமனையில் ஒன்றரை வயது குழந்தைக்கு மயக்க மருந்து கொடுத்ததை தொடர்ந்து, குழந்தை பரிதாபமாக உயிரிழந்தது.

இதையடுத்து குழந்தையின் உறவினர்கள் அளித்த புகாரின் பேரில் மயக்க மருந்து நிபுணர் ஒருவர் மீது அலட்சியத்தின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

கேரள மாநிலம் எரமாத்தை சேர்ந்த தேவன்ஷ் ஷெளரியா என்ற ஒன்றரை வயது குழந்தைக்கு உதட்டில் காயம் ஏற்பட்டது.

இதையடுத்து கடந்த ஞாயிற்றுக்கிழமை கண்ணூர் அடுத்த பையனூர் பகுதியில் உள்ள பி.எம்.எச் மருத்துவமனையில், அந்த குழந்தை சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டது.

அப்போது குழந்தைக்கு மயக்க மருந்து செலுத்தி காயத்திற்கு தையல் போடுமாறு, மருத்துவமனை மருத்துவர்கள் அறிவுறுத்தியதாக கூறப்படுகிறது.

இதைத்தொடர்ந்து மயக்க மருந்து செலுத்திய சிறிது நேரத்திலேயே, குழந்தை சுயநினைவை இழந்து, கண்ணூரில் உள்ள பேபி மெமோரியல் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டது.

அப்போது தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த குழந்தை பரிதாபமாக உயிரிழந்தது. இந்நிலையில் குழந்தையின் உறவினர்கள் அளித்த புகாரின்பேரில், பேபி மெமோரியல் மருத்துவமனை மருத்துவர் அஞ்சலி என்பவர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.