சபரிமலை அய்யப்பன் கோவிலில் தற்போது தந்திரியாக கண்டரரு மகேஷ் மோகனரு உள்ளார். இவரது பணிக்காலம் அடுத்த மாதம் (ஆகஸ்டு) 17-ந்தேதியுடன் முடிவடைகிறது. இதையடுத்து செங்கன்னூர் தாளமண் குடும்பத்தை சேர்ந்த ஒருவரை புதிய தந்திரியாக தேர்வு செய்ய திருவிதாங்கூர் தேவஸ்தானம் நடவடிக்கை மேற்கொண்டு வந்தது.
இந்த நிலையில் மூத்த தந்திரி கண்டரரு ராஜீவரரு மீதான வழக்கு காரணமாகவும், உடல்நிலையை கருத்தில் கொண்டும் அவர் தந்திரி பதவியில் இருந்து விலகுவதாக அறிவித்த போது அவரது மகன் கண்டரரு பிரம்ம தத்தனை நியமிக்க முன் மொழிந்து இருந்தார். இதையடுத்து தந்திரிக்கான அவரது தகுதியை உறுதி செய்ய காளிதாஸ் பட்டதிரிப்பாடு, சர்மன் வாசுவேன் பட்டதிலப்பாடு மற்றும் சுப்ரமணியன் நம் பூதிரி ஆகியோர் அடங்கிய ஆன்மிக பண்டிதர் நிபுணர் குழு அமைக்கப்பட்டது.
அவர்களின் சிபாரிசின் பேரில் சபரிமலை புதிய தந்திரியாக கண்டரரு பிரம்ம தத்தனை நியமிக்க திருவிதாங்கூர் தேவஸ்தானம் தீர்மானித்துள்ளது. இது தொடர்பான தீர்மான அறிக்கையை கேரள ஐகோர்ட்டின் தனி அமர்வுக்கு அனுப்பி வைத்து அதற்கான ஆணை பெறப்படும் என்று திருவிதாங்கூர் தேவஸ்தான தலைவர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
புதிய தந்திரி அடுத்த மாதம் 18-ந்தேதி முதல் ஓராண்டு காலத்திற்கு சபரிமலை அய்யப்பன் கோவிலில் தந்திரியாக பணியாற்றுவார்.
சபரிமலையில் உள்ள காவல் தெய்வம் மற்றும் கதவுகளுக்கு தங்க தகடு பதிக்கப்பட்டபோது தங்கம் திருடப்பட்டது தெரியவந்தது. இது தொடர்பாக சிறப்பு விசாரணைக்குழு அமைத்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இதில் பலர் கைதானார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
கேரளாவில் உள்ள சபரிமலை ஸ்ரீ தர்ம சாஸ்தா (ஐயப்பன்) கோவிலில் விற்பனை செய்யப்படும் அபிஷேக நெய்யில், கடந்த நவம்பர் 17, 2025 முதல் டிசம்பர் 27, 2025 ஆகிய தேதிகளுக்கு இடைப்பட்ட காலத்தில் நிதி முறைகேடு நடந்ததாக புகார் எழுந்தது.
இந்த கால கட்டத்தில் சபரிமலை ஐயப்பன் கோவிலில் பக்தர்களுக்கு விற்பனை செய்யப்பட்ட 16,628 பாக்கெட் நெய்யில், திருவிதாங்கூர் தேவசம் போர்டு ஊழியர்கள் 43 பேர் நிதி முறைகேட்டில் ஈடுபட்டதாக குற்றம்சாட்டப்பட்டது. நெய் பாக்கெட்டின் விற்பனைத் தொகை திருவிதாங்கூர் தேவசம் போர்டு செலுத்தப்படவில்லை என்றும், இதனால் ரூ.17 லட்சத்திற்கும் அதிகமான இழப்பு ஏற்பட்டதாகவும் கூறப்பட்டது.
இதையடுத்து திருவிதாங்கூர் தேவசம் போர்டின் ஊழல் தடுப்புத் துறை அளித்த புகாரின் அடிப்படையில், கேரள உயர்நீதிமன்றம் தானாக முன்வந்து உடனடி குற்றவியல் விசாரணைக்கு உத்தரவிட்டது.
இந்த வழக்கு குறித்து விசாரித்த நீதிபதிகள் வி.ராஜா விஜயராகவன் மற்றும் கே.வி. ஜெயக்குமார் அமர்வு, “இது ஊழல் தடுப்பு சட்டம் மற்றும் பாரதிய நியாய சம்ஹிதா ஆகியவற்றின் கீழ் குற்றங்களாக பதிவுசெய்யப்படும்.
குற்றம்சாட்டப்பட்ட நபர்களுக்கு எதிராக 1988 ஆம் ஆண்டு ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ், தண்டனைக்குரிய குற்றங்கள் ஏதேனும் நிரூபிக்கப்பட்டுள்ளனவா என்பதை ஆராய்ந்து, அந்த அறிக்கையை நான்கு வார காலத்திற்குள் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டும். இத்தகைய சூழ்நிலைகளில் இந்த விவகாரத்தை வெறும் நிர்வாக அலட்சியம் அல்லது குறைபாடுள்ள பதிவேடு என்ற கண்ணோட்டத்தில் மட்டுமே பார்க்க முடியாது" என்று நீதிபதிகள் அமர்வு கூறியது.