இந்தியா

பேராசை, ஆசை வார்த்தைகளுக்கு இணங்கும் நீதிபதிகள் அகற்றப்பட வேண்டும்: உச்சநீதிமன்ற நீதிபதி நாகரத்னா

தீர்ப்பு வழங்கும் போது சமரசம் செய்துகொள்வது நீதித்துறைக்கே ஒரு கரும்புள்ளியாக அமையும்.

கர்நாடகா: பெங்களூருவில் நடைபெற்ற 22 வது மாநில அளவிலான நீதித்துறை அதிகாரிகள் மாநாட்டில் உச்ச நீதிமன்ற நீதிபதி பி.வி. நாகரத்னா கலந்துகொண்டு உரையாற்றினார்.

அவர் பேசியதாவது, மாவட்ட நீதிபதிகளின் சம்பளம் மற்றும் படிகளை அதிகரிப்பதற்கான 2வது தேசிய நீதித்துறை ஊதியக் குழுவின் பரிந்துரைகளை உச்ச நீதிமன்றம் ஏற்றுக்கொண்டுள்ளது.

சம்பளம் கணிசமாக உயர்த்தப்பட்டுள்ள நிலையிலும், ஒரு நீதிபதி தனது வருமான வரம்பிற்குள் வாழ முடியாமல் பேராசை மற்றும் ஆசை வார்த்தைகளுக்குப் பலியானால், அத்தகையவர்களை நீதித்துறை அமைப்பிலிருந்து உடனடியாக வெளியேற்ற வேண்டும்.

நீதிபதிகள் எந்தவிதமான வெளிப்புற அழுத்தங்களுக்கும் பணியக்கூடாது. இந்த அழுத்தம் சில நேரங்களில் சக ஊழியர்களிடமிருந்தே வரலாம்,அதற்கும் இடம் கொடுக்கக் கூடாது.

தீர்ப்பு வழங்கும் போது சமரசம் செய்துகொள்வது நீதித்துறைக்கே ஒரு கரும்புள்ளியாக அமையும். தைரியமாகவும் சுதந்திரமாகவும் முடிவுகளை எடுக்க வேண்டும்.

மாவட்ட நீதிபதிகளுக்குப் பாதுகாப்பும் ஆதரவும் வழங்குவது உயர் நீதிமன்றங்களின் கடமையாகும். பதவி உயர்வு, பணியிட மாற்றம் போன்றவற்றில் வெளிப்படைத்தன்மை இருக்க வேண்டும்." என்று தெரிவித்தார் .

இந்த மாநாட்டில் உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி சூர்யகாந்த், கர்நாடக முதல்வர் சித்தராமையா மற்றும் நீதிபதிகள் அரவிந்த் குமார், விபு பக்ரு உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.