இந்தியா

ஜார்க்கண்ட் அரசு ஏமாற்றிவிட்டது - நீதிமன்ற உத்தரவு குறித்து மாணவர்கள் குமுறல்

26 நாட்கள் போராட்டம் நடத்தி, பின்னர் இரண்டு மாதங்களுக்கு போராட்டத்தை நிறுத்தினர்.

11-ஆவது மற்றும் 13-ஆவது ஜே.பி.எஸ்.சி. தேர்வுகள் மூலம் நடத்தப்பட்ட நியமனங்களை ரத்து செய்யும் அறிவிப்புகளுக்கு உயர் நீதிமன்றம் தடை விதித்ததை அடுத்து, ஜே.பி.எஸ்.சி.-ஜே.எஸ்.எஸ்.சி. சீர்திருத்தக் குழுவின் கீழ் உள்ள மாணவர் தலைவர்கள், ஜார்க்கண்ட் அரசு வேலை தேடுபவர்களை "ஏமாற்றுவதாக" குற்றம் சாட்டினர்.

ஜார்க்கண்ட் உயர் நீதிமன்றத்தில் தனது முடிவை அரசு திறம்பட நியாயப்படுத்த தவறிவிட்டது என்று மாணவர் தலைவர்கள் குற்றம் சாட்டினர்.

வேலை தேடுபவர்களை ஏமாற்றியுள்ளது:

"ஆட்சேர்ப்பு தேர்வுகளை ரத்து செய்த அரசின் நிலைப்பாட்டை நியாயப்படுத்த, தலைமை வழக்கறிஞரோ அல்லது எந்தவொரு மூத்த வழக்கறிஞரோ வியாழக்கிழமை உயர் நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை. ஆஜராகியிருந்த வழக்கறிஞர்களும் தற்காத்து ஒரு வார்த்தைகூட பேசவில்லை. இது போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவருவதற்கான ஒரு பொறி என்பதை தெளிவாக காட்டுகிறது," என்று மன்ச் தலைவர் குணால் பிரதாப் சிங் குற்றம் சாட்டினார்.

22 ஆட்சேர்ப்புத் தேர்வுகளை ரத்து செய்வதற்கான அரசின் முடிவை தொடர்ந்து, தேர்வர்கள் ராஞ்சியின் ஜெய்பால் சிங் முண்டா மைதானத்தில் 26 நாட்கள் போராட்டம் நடத்தி, பின்னர் இரண்டு மாதங்களுக்கு போராட்டத்தை நிறுத்தினர்.

"ஆட்சேர்ப்பு தேர்வுகளில் நடக்கும் முறைகேடுகளை கடுமையாக ஒடுக்க அரசு விரும்புகிறது என்று நாங்கள் அதன் நோக்கத்தை நம்பினோம், ஆனால் நாங்கள் தவறாக நினைத்துவிட்டோம். அரசு ஆயிரக்கணக்கான வேலை தேடுபவர்களை ஏமாற்றியுள்ளது," என்று மன்ச் தலைவர் ரவீந்திர பாஸ்வான் கூறினார்.

வெள்ளிக்கிழமை அன்று அனைத்து 24 மாவட்டங்களிலும் முதலமைச்சர் ஹேமந்த் சோரனின் உருவ பொம்மைகளை அந்த அமைப்பு எரிக்கும் என்று அவர் அறிவித்தார்.

உயர் நீதிமன்றம் தடை:

11-ஆவது மற்றும் 13-ஆவது ஜார்க்கண்ட் பொது சேவை ஆணைய (JPSC) தேர்வுகள் மூலம் அரசு ஊழியர்களின் நியமனங்களை ரத்து செய்யும் அறிவிப்புகளின் செயல்பாட்டிற்கு உயர் நீதிமன்றம் நேற்று (வியாழக்கிழமை) தடை விதித்தது.

மேலும், உணவுப் பாதுகாப்பு அதிகாரிகளின் நியமனங்களை ரத்து செய்யும் உத்தரவின் செயல்பாட்டிற்கும் உயர் நீதிமன்றம் தடை விதித்தது.

அரசு அறிவிப்புகளுக்கு எதிரான பல மனுக்களை விசாரித்த நீதிபதி தீபக் ரோஷன், அடுத்த விசாரணை தேதியான செப்டம்பர் 15-ஆம் தேதிக்குள் மாநில அரசு தனது பதிலை அளிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

16 நாட்கள் போராட்டத்திற்கு பிறகு தனது உண்ணாவிரதத்தை முடித்துக்கொண்ட ஜேஎல்கேஎம் தலைவர் தேவேந்திர நாத் மாத்தோ, 11 முதல் 13 வரையிலான ஜே.பி.எஸ்.சி. குடிமை பணி தேர்வுகளை ரத்து செய்த மற்றும் உணவு பாதுகாப்பு அதிகாரிகளின் நியமனத்தை நிறுத்திய அரசின் உத்தரவுக்கு மறு அறிவிப்பு வரும் வரை தடை விதித்த நீதிமன்றத்தின் முடிவை மதிப்பதாக கூறினார்.