இந்தியா

மருத்துவமனை கழிப்பறையில் குழந்தை பெற்ற 14 வயது சிறுமி..!

சிறுமி மற்றும் பச்சிளம் குழந்தையை மீட்ட போலீசார் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்தனர்.

ஜார்கண்ட் மாநிலத்தில் உள்ள சதார் மருத்துவமனையில் 14 வயது சிறுமி ஒருவர் கர்ப்பந்தரித்த நிலையில் அப்பகுதியில் உள்ள மருத்துவமனைக்கு நேற்று வந்துள்ளார்.

அப்போது மருத்துவமனை வார்டு பகுதியில் உள்ள கழிப்பறைத் தொட்டியில் பிரசவித்து விட்டு, மருத்துவமனையை விட்டு அச்சிறுமி வெளியேற முயன்றபோது தலைசுற்றல் ஏற்பட்டு சிறிது தூரத்தில் மயங்கி விழுந்துள்ளார்.

இதையடுத்து கழிப்பறைக்கு உள்ளேயும் வெளியேயும் இரத்தம் இருப்பதை பார்த்த மருத்துவமனை ஊழியர்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

மருத்துவமனைக்கு விரைந்து வந்த போலீசார் கழிவறையை ஆய்வு செய்தபோது, கழிப்பறைத் தொட்டிக்குள் பச்சிளம் குழந்தை சிக்கிக்கொண்டு கிடந்துள்ளது.

ஜார்கண்டில் 14 வயது சிறுமி மற்றும் குழந்தை மீட்பு

இதையடுத்து பச்சிளம் குழந்தையையும், மருத்துவமனை வளாகத்தில் மயங்கிய நிலையில் இருந்த 14 வயது சிறுமியையும் மீட்ட போலீசார் மருத்துவமனையில் அனுமதித்தனர்.

இதுகுறித்து காவல் நிலைய பொறுப்பாளர் ரத்தன்குமார் சிங் கூறும்போது, “தாய் மற்றும் பச்சிளம் குழந்தையின் உடல்நிலை தற்போது சீராக உள்ளது.

சிறுமியின் வயது மற்றும் சூழ்நிலைகளை கருத்தில் கொண்டு, வழக்கின் விசாரணை கவனமாக நடத்தப்படும்” என்று தெரிவித்தார்.