இந்தியா

என் தங்கையை வைத்து என் மீது சேற்றை வாரி இறைக்கின்றனர்: ஜெகன் மோகன் ரெட்டி

எனக்கு எதிராக தெலுங்கு தேசம், பா.ஜ.க., ஜனசேனா, காங்கிரஸ் கட்சி இணைந்து பிரசாரம் செய்கின்றனர்.கடவுள் மற்றும் மக்கள் என் பக்கம் உள்ளனர்.

திருப்பதி:

ஆந்திராவில் ஒரே கட்டமாக பாராளுமன்ற மற்றும் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலையொட்டி முதல் மந்திரி ஜெகன்மோகன் ரெட்டி நேற்று பஸ் யாத்திரை பிரசாரம் தொடங்கினார்.

தனது சொந்த தொகுதியான கடப்பாவில் தேர்தலில் பிரசாரத்தை முடித்து விட்டு பின்னர் பொதுக்கூட்டத்தில் பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-

மக்களின் ஆதரவு இன்றி தெலுங்கு தேசம் கட்சித் தலைவர் சந்திரபாபு நாயுடு மோசமான அரசியல் செய்து வருகிறார். என் மீது சேற்றை வாரி வீசி அரசியல் செய்கிறார்.

எனக்கு எதிராக தெலுங்கு தேசம், பா.ஜ.க., ஜனசேனா, காங்கிரஸ் கட்சி இணைந்து பிரசாரம் செய்கின்றனர்.

இது போதாதென்று எனது தங்கையை அரசியலுக்கு அழைத்து வந்து அவர் மூலம் சேற்றை வாரி இறைத்து வருகின்றனர். நான் எந்த தவறும் செய்யவில்லை. நீதியை நம்புகிறேன்.

கடவுள் மற்றும் மக்கள் என் பக்கம் உள்ளனர்.

இவ்வாறு அவர் பேசினார்.

ஜெகன் மோகன் ரெட்டியின் தங்கை ஷர்மிளா காங்கிரஸ் தலைவராக உள்ளார். இவர் ஜெகன்மோகன் ரெட்டியை கடுமையாக விமர்சித்து வருகிறார்.