கொச்சி:
கேரள பல்கலைக்கழகங்களின் வேந்தர் பதவியில் இருந்து தன்னை விடுவிக்குமாறு அம்மாநில ஆளுநர் ஆரிப் முகமது கான் வலியுறுத்தியுள்ளார்.
கேரளாவில் 13 பல்கலைக்கழகங்கள் இருக்கின்றன. இந்த பல்கலைக்கழகங்கள் தொடர்பாக எந்த கோப்பு அனுப்பப்பட்டாலும் அதில் நடவடிக்கை எடுக்காமல் முதல்வர் பினராயி விஜயனிடம் அனுப்பி விடுகிறார்.
இதுகுறித்து இன்று ஆளுநர் ஆரிப் முகமது கான் அளித்த பேட்டியில் கூறியதாவது:-
கேரள சட்டமன்றத்தை கூட்டி என்னை வேந்தர் பொறுப்பில் இருந்து நீக்கும் தீர்மானத்தை இயற்றுங்கள். அதை என்னிடம் அனுப்பினால் கையெழுத்து போட்டுவிடுகிறேன். இல்லையென்றால் என்னை வேந்தர் பொறுப்பில் இருந்து நீக்கி மாநில முதல்வரையே வேந்தராக்கும் அவசர சட்டத்தை தயார் செய்து அனுப்புங்கள். அதற்கும் ஒப்புதல் அளிக்கிறேன்.
கேரள பல்கலைக்கழக வேந்தர் என்ற வகையில் நான் செயல்படுவதற்கு இடையூறுகள் உள்ளன. இங்கு அரசியல் சட்டத்தின்படி நடக்க வேண்டிய ஒன்று, முறை தவறி நடந்துவிட்டது. அதனால் நான் வேந்தராக இருக்க விரும்பவில்லை. என்ன நடந்தது என்று இப்போது கூற இயலாது. தேசிய அமைப்புகள் இந்த விஷயத்தில் சம்பந்தப்பட்டுள்ளன.
இவ்வாறு ஆரிப் முகமது கான் கூறினார்.