இந்தியச் சமூகத்தில் காவல்நிலையம் செல்வது என்பது தற்போதைய காலக்கட்டத்திலும் கொலைக்குற்றத்திற்கு சமமாக பார்க்கப்படுகிறது (அதாவது விசாரணைக்காக சென்று வந்தாலும்),.
‘அய்யய்யோ ஜெயில் வாசலை மிதிச்சிட்டு வந்துட்டானே’ என அது பெரும் அவமானகரமான ஒன்றாக கருதப்படுகிறது.
ஆனால் சிறை எப்படி இருக்கும் என நம்மில் பலருக்கும் ஒரு சந்தேகம் இருக்கும். அந்த சந்தேகத்தை தீர்க்கும் வகையில் தெலங்கானா அரசு ஒரு திட்டத்தை செயல்படுத்த உள்ளது. என்னடா இது? என நாம் யோசிக்கலாம், ஆம்.
தெலங்கானா அரசு சிறை அனுபவத்தைப் பெற ஒருநாள் கட்டணமாக ரூ.500 வசூலித்து நாம் எப்படி இருக்கும் என எண்ணிய அந்த உணர்வையும் நமக்கு கொடுக்கிறது.
அதாவது, தெலங்கானா சிறைத் துறையின் "ஃபீல் தி ஜெயில்" என்ற திட்டத்தின் கீழ், பொதுமக்கள் ஒரு நாள் சிறை வாழ்க்கையை அனுபவிக்க ஒரு நபருக்கு ரூ. 500 கட்டணம் வசூலிக்கப்படுகிறது.
இந்தத் திட்டம் முதலில் தெலங்கானாவின் மேடக் மாவட்டத்தில் உள்ள 220 ஆண்டுகள் பழமையான சங்கரெட்டி பாரம்பரிய சிறை அருங்காட்சியகத்தில் தொடங்கப்பட்டது. தற்போது ஹைதராபாத்தில் உள்ள சஞ்சல்குடா மத்திய சிறை வளாகத்திலும் இந்த அனுபவம் வழங்கப்படுகிறது.
இதன்படி சிறை அனுபவத்தைப் பெற விரும்புவோர் இங்கு சென்று ஒருநாள் கட்டணமாக ரூ.500 செலுத்தி அங்கு தங்கிக்கொள்ளலாம். 24 மணி நேரத் தங்குதலின் போது, பங்கேற்பாளர்களுக்குக் சீருடை, சோப்பு, ஸ்டீல் தட்டு மற்றும் குவளை என கைதிகளுக்கு பயன்படுத்தும் அனைத்துப் பொருட்களும் வழங்கப்படும். அதேபோல் கைதிகள் என்ன சாப்பிடுவார்களோ அதே உணவும் வழங்கப்படும்.
குறிப்பாக பங்கேற்பாளர்கள் தங்களின் செல்போன் மற்றும் தனிப்பட்ட உடமைகளைச் சிறை அதிகாரிகளிடம் ஒப்படைக்க வேண்டும். ஒருநாள் கழித்து நீங்கள் விடுவிக்கப்படுவீர்கள். சிறை அனுபவமும் உங்களுக்கு கிட்டும்.
குற்றங்கள் செய்வதால் ஏற்படும் விளைவுகள் மற்றும் சிறைக்குள் இருக்கும் வாழ்க்கையைப் பற்றிய ஆழமான, தனிப்பட்ட புரிதலை இந்த அனுபவம் வழங்கும் என இதன் ஏற்பாட்டாளர்கள் கூறுகின்றனர்.
சல்சல்குடா அருங்காட்சியகத்தின் தொடக்க விழா ஏப்ரல் 28 அன்று நடைபெறவிருந்த நிலையில் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இன்னும் ஒரு வாரத்தில் பொதுமக்களுக்காக திறக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் டிக்கெட் விலை இன்னும் இறுதி செய்யப்படவில்லை என்றும் கூறப்படுகிறது. சங்காரெட்டி அருங்காட்சியத்தில் முன்னர் ரூ.500 வசூலிக்கப்பட்டது. ஆனால் இப்போது அத்தொகை மாறலாம் எனவும் கூறப்படுகிறது.